இலங்கை - நியூசி டெஸ்ட் : இதுவல்லவோ டெஸ்ட் மேட்ச்! இறுதி பந்து வரை நீடித்த யுத்தம்! இறுதியில் கிடைத்த முடிவால் மகிழ்ச்சியின் உச்சியில் இந்தியா!
New zealand get thrill win against Sri lanka in Christchurch
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற இலங்கை நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ஐந்தாவது நாள் இறுதிக்கட்டத்தில் பரபரப்பான நிலையில் நியூசிலாந்து வெற்றிக்கனியை எட்டி பறித்திருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா, இலங்கை அணிகள் போட்டியிட்டு வந்தன. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுவிட்ட நிலையில், இரண்டாவது அணியாக யார் தகுதி பெறுவது என்பதில் இந்தியா இலங்கை அணிகள் இடையே போட்டி நிலவியது. தற்போது அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டால் நியூசிலாந்து இலங்கை டெஸ்ட் தொடரின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியானது டிராவை நோக்கியே நகர்ந்து கொண்டிருப்பதால் இலங்கை நியூசிலாந்து அணியின் போட்டிகளின் முடிவானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. நேற்று நான்காம் நாள் ஆட்டம் நேரம் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழந்து 28 ரன்கள் எடுத்திருந்தது. இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் நியூசிலாந்து வெற்றி பெறலாம், இலங்கையும் வெற்றி பெறலாம் அல்லது சமனிலும் முடியலாம் என்ற நிலையில் தொடங்க இருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் உணவு இடைவேளை வரை தொடங்கப்படவே இல்லை.
பின்னர் மழை விட்ட பிறகு ஆடுகளம் சரி செய்யப்பட்டு, 53 ஓவர்கள் மட்டுமே வீசப்படும் என அறிவிக்கப்பட்டு ஆட்டமானது தொடங்கியது. ஆரம்பத்தில் மிதமான வேகத்தில் நியூசிலாந்து ஆடினாலும் சீரான இடைவெளியில் இலங்கை விக்கெட்டுகளை எடுத்துக் கொண்டே இருந்தனர். விக்கெடுகளை அதிகம் இழக்காமல் தங்கள் பங்களிப்பை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அளித்து வந்தனர். டாம் லதாம் 24 ரன்களிலும், நிக்கோலஸ் 20 ரன்களிலும் ஆட்டம் இழக்க, வில்லியம்சன் ஒரு பக்கம் நின்று நங்கூரமாக ஆடிக் கொண்டிருக்கிறார. மறுமுனையில் வந்த டேரல் மிச்சல் ஒருநாள் போட்டிகளைப் போல அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற நிலையை உருவாக்கினார்.
257 ரன்கள் 53 ஓவர்களில் எடுப்பது கடினம் என கருதப்பட்ட நிலையில், மிச்சேல் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, வில்லியம்சன் சதத்துடன் 122 ரன்கள் களத்தில் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தார். இறுதி ஓவரில் எட்டு ரன்களே தேவை என்ற நிலையில் இறுதி பந்தில் நியூசி வெற்றி இலக்கை எட்டியது.
நியூசிலாந்து வெற்றி பெற்றதால் இந்தியா பைனலுக்கு முன்னேறிவிட்டது. இதன்மூலம் அஹமதாபாத் போட்டியை இந்தியா டிரா செய்து தொடரை வென்றாலே போதும் என்ற சூழல் உருவாகியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுவது உறுதியாகிவிட்டது.
English Summary
New zealand get thrill win against Sri lanka in Christchurch