சாத்தியமே இல்லாததைச் சாதித்த பாகிஸ்தான்...! ஈரான் - அமெரிக்கா இடையே சமரசம்...! - ஷெபாஸ் ஷெரீஃப் போட்ட வரலாற்று கையெழுத்து...!
Pakistan achieved impossible Reconciliation between Iran and America historic signature by Shehbaz Sharif
உலக அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்த அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்தில், முக்கிய மத்தியஸ்தராக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் கையெழுத்திட்டிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த அமைதி ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் ஆகியோரின் கையொப்பங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக, உலக வர்த்தகத்திற்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாக திறக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதற்கு பதிலாக, ஈரானின் துறைமுகங்கள் மீது அமெரிக்க கடற்படை மேற்கொண்டிருந்த முற்றுகை நடவடிக்கைகள் உடனடியாக திரும்பப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய ஷெபாஸ் ஷெரிஃப், இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கில் நீண்டகால அமைதிக்கான முக்கிய தொடக்கமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே 100 நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதல், இந்த ஒப்பந்தத்தின் மூலம் உடனடி நிறுத்தத்தையும் நிரந்தர தீர்விற்கான பாதையையும் எட்டியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது விரிவான தாக்குதலை தொடங்கியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் கடுமையான போர் சூழல் உருவானது. தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல முக்கிய ராணுவத் தலைவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் ஈரானின் முக்கிய அரசியல் மற்றும் ராணுவத் தலைமை அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்த இந்த மோதலில், ஈரான் மற்றும் லெபனான் பகுதிகளில் 7,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
மேலும் உலகளாவிய அளவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்ததுடன், பணவீக்க அழுத்தமும் அதிகரித்து பல நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.மத்திய கிழக்கில் வெடித்த இந்த போர் உலகளாவிய வர்த்தகம், எரிசக்தி விநியோகம் மற்றும் சர்வதேச பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில், ஈரான் முன்வைத்த 14 அம்ச கோரிக்கைகளை பரிசீலித்த அமெரிக்கா, முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கில் புதிய அரசியல் சமநிலையை உருவாக்குமா, அல்லது நீண்டகால அமைதிக்கான அடித்தளமாக அமையுமா என்பது சர்வதேச அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Pakistan achieved impossible Reconciliation between Iran and America historic signature by Shehbaz Sharif