தவெக அரசு ஒரு காப்பி பேஸ்ட் அரசு: ஆளுநர் உரைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
TVK Government is a Copy-Paste Administration Opposition Leader Udhayanidhi Stalin Launches Multi-Pronged Attack on Governor Address
தமிழக சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடரில் ஆளுநர் அர்லேகர் ஆற்றிய கொள்கை விளக்க உரை குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது கடுமையான விமர்சனங்களையும் கண்டனங்களையும் முன்வைத்தார்.
தவெக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் அர்லேகர் எவ்வித மாற்றமுமின்றி அப்படியே அவையில் வாசித்ததைச் சுட்டிக்காட்டிய அவர், ஆளுநர் உரையில் தமிழக அரசின் சாதனைகளாக வாசிக்கப்பட்டவை எதுவும் கடந்த 30 நாட்களில் தவெக அரசு செய்த சாதனைகள் அல்ல என்றார். அவை அனைத்தும் முந்தைய திமுக அரசின் உழைப்பும் சாதனைகளும் ஆகும் என்று குறிப்பிட்ட அவர், திமுக அரசின் திட்டங்களைத் தங்களது சாதனைகளாகக் காட்டி, தவெக அரசு ஒரு ஸ்டிக்கர் ஒட்டும் காப்பி பேஸ்ட் அரசாகத் தற்பொழுது மாறியுள்ளது என்று மிகக் காட்டமாகச் சாடினார்.
குறிப்பாக, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் பெயரைத் தவெக அரசு திட்டமிட்டு மாற்றியிருப்பதை விமர்சித்த அவர், முதல்வன் என்றாலே மு.க.ஸ்டாலினின் பெயர்தான் மக்களுக்கு நினைவுக்கு வரும் என்பதால் காழ்ப்புணர்ச்சியோடு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு தற்பொழுது முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய உதயநிதி ஸ்டாலின், கடந்த ஒரே மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 175 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இன்று மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு குற்றச்செயல்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே நேரடியாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார். மாநிலத்தில் இவ்வளவு பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் மக்கள் துயரங்களும் நடக்கும் போதும், முதலமைச்சர் விஜய் இன்னும் தேர்தல் பிரச்சார மனநிலையிலேயே இருந்துகொண்டு, கண்ணாடியைப் பார்த்துத் தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறாரே தவிர, மக்களின் உண்மையானப் பிரச்சினைகளைப் பற்றி எப்போது வாய் திறப்பார் என்று கேள்வி எழுப்பினார். முதலமைச்சர்தான் மக்கள் பிரச்சினைகளில் மௌனம் காக்கிறார் என்றால், அவரது அமைச்சரவையில் உள்ள மற்ற அமைச்சர்களும் அவரைப் போலவே எதற்கும் வாய் திறக்காமல் இருக்கிறார்கள் என்று சாடினார்.
மேலும், தவெக அரசின் தற்போதைய அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், பீரோக்களை இழுப்பது போல, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தவெக அரசு தங்களது பக்கமாக இழுக்கும் புல்லிங் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் கிண்டல் செய்தார். மாநிலத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும் என்று நம்பி இந்த ஆட்சிக்கு வாக்களித்த பொதுமக்களே தற்பொழுது மாட்டிக்கொண்டோம் என்று வேதனையுடன் புலம்பத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், மக்கள் எதிர்கொள்ளும் நிஜப் பிரச்சினைகளுக்காகவாவது முதலமைச்சர் விஜய் தற்பொழுது தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும் என்றும் வினா எழுப்பினார்.
English Summary
TVK Government is a Copy-Paste Administration Opposition Leader Udhayanidhi Stalin Launches Multi-Pronged Attack on Governor Address