அடிக்கடி அணியில் மாற்றம் செய்வதே இந்திய தோல்விக்கு காரணம் – கௌதம் கம்பீரை விமர்சித்த அஜிங்க்ய ரஹானே
Frequent changes in the team are the reason for India defeat Ajinkya Rahane criticizes Gautam Gambhir
நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2–1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம், சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா முதன்முறையாக தோல்வியடைந்துள்ள வரலாற்று சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன், 2024ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தது.
இந்த தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அணித் தேர்வு மாற்றங்களே என முன்னாள் இந்திய கேப்டன் அஜிங்க்ய ரஹானே கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, முகமது ஷமிக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்தது போன்ற முடிவுகள் இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ரஹானே, “இந்திய அணி கடைசியாக விளையாடிய 9 ஒருநாள் போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்துள்ளது. அதற்கான முக்கிய காரணம், அணியில் தொடர்ந்து செய்யப்படும் அதிகமான மாற்றங்கள்தான். உலகக் கோப்பை போன்ற பெரிய தொடருக்காக அணியை உருவாக்கும்போது, வீரர்களுக்கு நிர்வாகத்திடமிருந்து பாதுகாப்பும் தெளிவும் தேவை” என்று கூறினார்.
மேலும், “ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களை மாற்றுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு ஃபார்மெட்டுக்கும் குறிப்பிட்ட வீரர்களை தெளிவாக தேர்வு செய்ய வேண்டும். இது இந்திய ரசிகர்கள் அனைவரிடமும் எழும் பொதுவான கேள்வி. குறிப்பாக, சொந்த மண்ணில் இந்திய அணி எப்போதும் தொடர்களை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.
“நியூசிலாந்து எந்த அணியுடன் வந்தாலும், இந்திய அணி மேலோங்கும் என்ற நம்பிக்கை எப்போதும் இருக்கும். பொதுவாக சொந்த மண்ணில் இந்தியா 3–0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் என நினைப்போம். ஆனால் இந்த முறை நியூசிலாந்து சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. இது இந்திய அணியின் செயல்முறைகள் குறித்து பல கடினமான கேள்விகளை எழுப்புகிறது” என்றும் ரஹானே கூறினார்.
அணித் தேர்வு தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர், “எந்த வீரர்களுக்கு நீண்டகால ஆதரவு அளிக்கப் போகிறீர்கள் என்பதை நிர்வாகம் முதலில் முடிவு செய்ய வேண்டும். ஐபிஎல் மற்றும் டி20 தொடர்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் மீண்டும் தொடங்கும் போது, அதற்கேற்ற சரியான வீரர்கள் மற்றும் சேர்க்கைகளை கண்டறிந்து, அவர்களுக்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்த விமர்சனங்கள், இந்திய அணியின் எதிர்கால ஒருநாள் கிரிக்கெட் திட்டங்கள் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் அணுகுமுறை குறித்து மீண்டும் ஒரு முறை தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளன.
English Summary
Frequent changes in the team are the reason for India defeat Ajinkya Rahane criticizes Gautam Gambhir