மிகப்பெரிய நந்தி மற்றும் சிவன்... நிழல் விழாத கோபுரம்... அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்.!
Today special Thanjavur pragatheeshwarar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
தஞ்சாவூர் மாவட்டத்தின் மையப்பகுதியில் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தலத்தில் தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கம் உள்ளது. சுமார் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் கொண்டுள்ளது இதன் தனிச்சிறப்பு. சிவலிங்கத்திற்கு பீடம் அமைக்கப்படவில்லை. ஒரே கல்லால் ஆன பிரம்மாண்ட மூர்த்தியாக இத்தல மூலவர் அருள்பாலிக்கிறார்.
கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்தக்கல் பதிக்கப்பட்டுள்ளது. இது வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும்.
பெரிய நாயகி அம்மன் பெயருக்கேற்றாற் போல் சுமார் 9.5 அடி உயரத்தில், நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி பிரம்மாண்டமாக அருள்பாலிக்கிறாள்.
வராகி அம்மன் மற்றும் கருவூரார் சித்தருக்கு தனிச்சன்னதியும், சண்டிகேஸ்வரருக்கு மிகப்பெரிய தனிச்சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது.
வேறென்ன சிறப்பு?
இந்த கோயிலின் சிறப்பம்சம் என்னவென்றால் மதிய வேளைகளில் கோபுரத்தின் நிழல் ஆனது கீழே விழுவதில்லை என்பதாகும்.
கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலச வடிவிலான மேற்கூரை கல் சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லால் செய்யப்பட்டது என்பது பெரிய அதிசயம்.
இங்கு சிவபெருமானுக்கு எதிரில் உள்ள பெரிய நந்தி சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
சித்திரை மாதம் பிரம்மோற்சவம் 18 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. சதய நட்சத்திரம் அன்று கொடி ஏற்றி, சித்திரை நட்சத்திரம் அன்று தீர்த்தவாரி நடப்பது இத்தலத்தின் மிகச்சிறப்பான விழா ஆகும்.
ஐப்பசி அன்னாபிஷேகம், மாதாந்திர பிரதோஷம், திருவாதிரை, ஆடிப்பூரம் ஆகிய நாட்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
மனத்துயரம் நீங்க, மனஅமைதி கிடைக்க, வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காக பிரார்த்தனை செய்கின்றனர்.
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக துர்க்கையிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பிரகதீஸ்வரருக்கு 25 மீட்டர் நீளமுள்ள வேஷ்டியும், 14 அடி உயர மாலையும், அம்மனுக்கு 9 கஜ புடவையும் சாற்றி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special Thanjavur pragatheeshwarar temple