கருவறையில் சிரசு.. பாதாளத்தில் பைரவி.. அருள்மிகு காலபைரவர் திருக்கோயில்.!
Today special kalabairavar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜையினி மாவட்டத்தின் மையப்பகுதியில் அருள்மிகு காலபைரவர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
உஜ்ஜையினியில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இக்கோயிலில் உள்ள மூலவர் திருமேனி சற்றே வித்தியாசமான தோற்றத்தில் உள்ளது. உஜ்ஜையினி காலபைரவர் கோயிலின் நுழைவு வாயில் கோட்டை வடிவில் மால்வா கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்குகிறது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் காணப்படும் பைரவர்களை போல் அல்லாமல், பெரிய அளவிலான சிரசு மட்டும் கருவறையில் காணப்படுகிறது. இக்கருவறையின் எதிரே தீபஸ்தம்பம் உள்ளது.
காலபைரவரின் வாகனமான நாய் கருப்பு சிலை வடிவத்தில் வாசலில் உள்ளது.
பக்தர்கள் பூஜைக்கு எடுத்துச் செல்லும் கூடையில் பூமாலை, கருப்புக்கயிறு, ஊதுபத்தியுடன் சேர்த்து மதுபானமும் இடம் பெற்றுள்ளது.
இக்கோயிலில் அர்ச்சனைக்காக பக்தர்கள் கொடுக்கும் மது பாட்டிலை பூசாரி திறந்து, அதை ஒரு தட்டில் ஊற்றி கால பைரவரின் வாயருகே வைக்கிறார். சில நொடிகளில் தட்டில் ஊற்றப்பட்ட மதுவை உறிஞ்சிக் கொள்கிறார் காலபைரவர்.
இரண்டு, மூன்று முறை மது உறிஞ்சப்பட்டதும் மீதமுள்ள மது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
பைரவர் வாயில் சென்ற மது எப்படி? எங்கே? சென்றது என்பதை இதுவரையில் யாராலும் கண்டுபிடிக்க முடியாத மர்மமாக இருக்கின்றது.
வேறென்ன சிறப்பு?
பைரவர் சன்னதியின் அருகில் உள்ள ஆலமரத்தடியில் சிவலிங்கமும், எதிரே நந்திதேவரும் எழுந்தருளியுள்ளனர்.
காபாலிகர் மற்றும் அகோரி பிரிவினர்களின் தாந்திரீக பூஜைக்கு மிக முக்கியமான இடமாக விளங்குகிறது உஜ்ஜைனி.
கோயில் சுவரில் விநாயகர், விஷ்ணு, தேவி ஆகியோர் ஒருசேர அமைந்த புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன.
பைரவருக்கு வலப்புறத்தில் பூமி மட்டத்திற்குக் கீழ் சுமார் இரண்டரை அடி சதுர வடிவிலான நுழைவாயிலில் குனிந்து தவழ்ந்து சென்றால் பாதாளத்தில் பைரவியின் சன்னதி உள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
இக்கோயிலில் காலபைரவர் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
மகாசிவராத்திரி, ஐப்பசிமாத தேய்பிறை அஷ்டமி ஆகியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
உடல்நலத்தை பாதுகாக்கவும், இழந்த பொருட்களை திரும்பப் பெறவும், செய்யும் தொழிலில் விருத்தியடையவும், தடைபட்ட திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தல மூலவர் துன்பத்திலிருந்தும் காத்து, அளவற்ற பேறுகளை அளிப்பவர் என்பதால் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special kalabairavar temple