ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது...! - திருநெல்வேலியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் பரபரப்பு பேட்டி
I dont even know who Adhav Arjuna BJP State President Nainaar sensational interview Tirunelveli
'விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜக கூட்டணியோ அல்லது பேச்சுவார்த்தையோ நடத்தவில்லை' என்று மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், கூட்டணி குறித்துப் பேசி வரும் ஆதவ் அர்ஜுனா என்பவர் யாரென்றே தமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஓரிரு நாட்களில் தமிழகம் வரவுள்ளதாகவும், அப்போது அதிகாரப்பூர்வமான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறையை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், அந்த அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படுவதாகவும், 10 ஆண்டுகளுக்கு முன்பே பதிவான வழக்குகளின் அடிப்படையிலேயே தற்போது விசாரணைகள் நடப்பதாகவும் விளக்கமளித்தார்.
விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அவர் மீது வருமான வரித் துறை வழக்குகள் இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பிரதமர் மோடி விரைவில் கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் வரவுள்ளதாகவும், அவருடன் அமித் ஷா, நிதின் நபீன் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் தமிழகம் வரத் திட்டமிட்டுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளதை விமர்சித்த அவர், வரவிருக்கும் தேர்தலில் மக்கள் அவர்களின் பலத்தைக் குறைப்பார்கள் என்றார். இறுதியில், அனைவருக்கும் தனது யுகாதி வாழ்த்துகளைத் தெலுங்கில் தெரிவித்துக் கொண்டார்.
English Summary
I dont even know who Adhav Arjuna BJP State President Nainaar sensational interview Tirunelveli