5 தலைநகரங்கள், பனைத் திட்டம், 75% வரிப் பங்கு...! - நாம் தமிழர் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை!
5 Capitals Palm Tree Project 75 Tax Share Naam Tamilar Katchi Bold Election Manifesto
சென்னை கிண்டியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் "தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி" நடத்தப்படும் என்றும், அரசு மக்களின் கருத்துக்கு இணங்காமல் அவர்களின் நலனுக்காக மட்டுமே இயங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கையின் முக்கிய அம்சமாக, தமிழகத்தில் ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மொழி மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், சென்னை தொழில்நுட்பத் தலைநகராகவும், கோவை தொழில் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகராகவும், திருச்சி நிர்வாகத் தலைநகராகவும் மாற்றப்படும்.
மேலும், தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை திருச்சிக்கு மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அனைவருக்கும் அரசு வேலை, பனைத் திட்டம், மற்றும் படிக்காதவர்களே இல்லாத நிலை போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மாநில உரிமைகள் சார்ந்து, வசூலிக்கப்படும் வரிகளில் 75 சதவீதத்தை மாநிலத்திற்கும் 25 சதவீதத்தை மத்திய அரசுக்கும் வழங்க வலியுறுத்தப்படும்.
100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய, வாக்களித்ததற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அரசு சலுகைகள் வழங்கப்படும் என்ற விதியைக் கொண்டு வரவும், மின்னணு இயந்திரங்களுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கெனத் தனித் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதும் இந்த அறிக்கையின் சிறப்பம்சமாகும்.
English Summary
5 Capitals Palm Tree Project 75 Tax Share Naam Tamilar Katchi Bold Election Manifesto