இன்று முன்னோர்களின் ஆசியை தரும் மகாளய அமாவாசை.. காகத்திற்கு உணவிடுங்கள், தானம் செய்யுங்கள்.!
Today Mahalaya Amavasai special
இன்று முன்னோர்களை ஆராதிக்கும் மகாளய அமாவாசை..!!
புரட்டாசி அமாவாசையை மகாளய அமாவாசை என்றும், அதற்கு முந்தைய பதினைந்து நாட்களை மகாளய பட்சம் என்றும் சொல்வர். இந்த நாட்களில் பிதுர்லோகத்தில் வாழும் நம் முன்னோர்கள் ஆசியளிக்க பூமிக்கு வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிதுர்கடன் என்னும் தர்ப்பணம் செய்வது நம் கடமை.
செப்டம்பர் 25ஆம் தேதியான இன்று மகாளய அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நாம் தானம் கொடுப்பதன் மூலம் மறைந்த நம் முன்னோர்களை மகிழ்ச்சியடைய செய்யலாம். இதன் மூலம் தடையின்றி அவர்களின் ஆசி கிடைக்கும்.
புனிதமான மகாளய அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுப்பது, புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வது நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை.
மகாளய அமாவாசையின் சிறப்பு :
நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும், முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும், நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்கு நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது.
மூதாதையரை நினைத்து காகத்திற்கு உணவளித்து சாதம் வைத்து வழிபட்டால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.
சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு நமக்கு உதவிய அத்துணை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளயபட்ச விரத நாட்களில் தான்.
எனவே, மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை நாளில் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவலாம்.
மகாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அது ஆயிரம் மடங்கு புண்ணிய பலன்களை தரவல்லது. புண்ணிய மாதமான இந்த புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களது பரிபூரண ஆசிகளை பெறுவோமாக.
English Summary
Today Mahalaya Amavasai special