படையல் : முன்னோர்களுக்கு எவ்வாறு படைக்க வேண்டும்?
How padaiyal for kuladeiva
படையல்:
இந்து சமயங்களில் கடவுளைத் தொழும்போது வைத்து வணங்கப்படும் பொருட்களையும், உணவுப் பண்டங்களையும் குறிப்பது படையல் ஆகும். பொதுவாக தமிழர் கலாச்சாரத்தில் கடவுளின் படங்களுக்கோ, சிலைகளுக்கோ சூடம் காட்டி, தேங்காய் உடைத்த பிறகு அனைவருக்கும் படையல் பரிமாறப்படும்.
குலதெய்வ கோவில்களில் பூஜை செய்து அனைவரும் ஒன்றாக கூடியிருந்து படைப்பதும் உண்டு. ஏன்.... கோவில்களிலும், விஷேச நாட்களில் வீட்டிலும், இறந்த நம் முன்னோர்களுக்கும் சாமி கும்பிடும்போதும் இப்படையல் நிகழ்ச்சி நடந்தேறும்.
முன்னோர்களுக்கு படையல்.... எவ்வாறு செய்ய வேண்டும்?
தமிழர்களின் கலாச்சாரத்தில் முன்னோர்களுக்கு அவர்கள் இறந்த நாளிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு நாளிலோ ஆண்டுக்கு ஒருமுறை படையலிடும் வழக்கம் உள்ளது.
அவ்வாறு படையலிடும் நாளில் முன்னோர்களின் படத்தை வைத்தோ அல்லது வைக்காமலோ முன்னோருக்கு புதிய வேட்டி, துண்டு, சேலை ஆகியவற்றையும், வடை, பாயாசம் ஆகியவற்றோடு மூன்று வாழை இலைகளில் உணவுகளை படையலிட்டு வழிபடுவார்கள்.
அந்த மூன்று இலைகளில் உள்ள ஒரு இலையில் வைக்கப்பட்ட உணவை காக்கைகளுக்கு எடுத்து சென்று வைத்து விட்டு... அந்த காக்கைகள் உண்ட பின்னரே நாம் உண்ண வேண்டும். இதற்கு காரணம் இறந்த நம் முன்னோர் காக்கைகள் வடிவில் வந்து படையல் உணவை உண்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
சில சமயம் காக்கைகள் உண்ண வரவில்லையானால், பசுவுக்கு அந்த உணவை அளித்து உண்ண செய்து பிறகு உண்பார்கள்.
அதன்பிறகு படையலிட்ட இலையில் உள்ள உணவை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருக்கும் கொடுத்தும், குடும்ப உறுப்பினர்களில் இலைகளுக்கு பகிரப்பட்டு உண்ணப்படும்.
திருமணத்திற்கு முன்....
வீட்டுப் பிள்ளைகளுக்கு திருமணம் என்றால், குலம் தழைக்க வேண்டும் என்பதற்காக திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு முன்னோர்களுக்கு படையல் போடும் வழக்கம் உள்ளது.
முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி போன்றவற்றை விட அவர்களுக்கு பிடித்த விஷயத்தை வைத்து செய்யக்கூடிய ஒன்றை நாம் செய்யும் பொழுது நமக்கு முன்னோர்கள் நல்ல ஆசியை வழங்குவார்கள். அவர்களின் ஆசியை நாம் பெற்றுவிட்டால் நாம் செய்யும் எந்த ஒரு காரியமும் தடை இல்லாமல் அனைத்தும் வெற்றி பெற்றுவிடும்.
English Summary
How padaiyal for kuladeiva