தங்க நகையை குளிகை காலத்தில் வாங்கினால்.. மீண்டும் மீண்டும் தங்க நகை சேருமா?!
Gold plan about kuligai time
குளிகை நேரம்:
நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
சரி, குளிகை நேரம் என்றால் என்ன? யார் அந்த குளிகன். குளிகை நேரத்தில் நாம் எதை செய்யலாம்? எதை செய்யக்கூடாது? தினந்தோறும் வரும் குளிகை நேரம் எப்போது வரும். இப்படி பல தகவல்களை இங்கு பார்ப்போம்.
சூரியன் முதலான கிரகங்கள் ஏழிற்கும் ஏழு நாட்களின் பெயர் சூட்டினார்கள். ராகுவிற்கு தினமும் ராகு காலமாகவும், கேதுவிற்கு எமகண்ட நேரமும் ஒதுக்கப்பட்டது. மாந்திக்கு, தமிழகத்தில் நேரம் ஒதுக்குவது வழக்கில் இல்லை. ஆந்திரா, கேரளம், கர்நாடகம், வடமாநிலங்களில் வழக்கில் உள்ளது.
மாந்தன் என்பவன் சனிபகவான், அவனுடைய புதல்வன் மாந்தி, சனிக்கிரகத்தில் இருந்து வெளிவந்தவர் என்று வேத நூல்கள் கூறுகின்றன. அவருக்குக் குளிகன் என்றும் பெயர் உண்டு.
ஜாதக பலன் சொல்லும்போது, மாந்தியையும் அதாவது குளிகனையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என ஜாதக நூல்கள் பரிந்துரைக்கின்றன. அதாவது நல்ல செயல்கள் செய்யும் போது குளிகை காலம் பார்க்கத் தேவையில்லை. தாராளமாக செய்யலாம்.
பிதுர் (முன்னோர் வழிபாடு) காரியங்கள் செய்யும் போது குளிகையில் செய்யக்கூடாது என்பார்கள்.
தினசரி குளிகை நேரங்கள் :
குளிகை நேரம் : பகல்
ஞாயிறு : 03.00 - 04.30
திங்கள் : 01.30 - 03.00
செவ்வாய் : 12.00 - 01.30
புதன் : 10.30 - 12.00
வியாழன் : 09.00 - 10.30
வெள்ளி : 07.30 - 09.00
சனி : 06.00 - 07.30
தங்க நகையை குளிகை காலத்தில் வாங்குவது சரியா?
தங்க நகையை பிடிக்காது என்று யாரும் இருக்க மாட்டார்கள். ஆண்களோ, பெண்களோ இன்றைக்கு அனைவருமே நகை அணிகின்றனர். தங்கம் ஆபரணம் என்பதை விட.... முதலீடு செய்ய ஏற்றது என்பதனாலேயே அனைவரும் தங்கம் வாங்குகின்றனர். தங்கம் வாங்க குளிகை காலம் ஏற்றது என்கின்றனர். குளிகை காலத்தில் நல்லது செய்தாலும் அது மீண்டும் மீண்டும் நடக்கும். எனவேதான் இந்த நாளில் நகை அடகு வைப்பதோ, விற்பதோ கூடாது என்கின்றனர்.
குளிகை காலத்தில் என்னென்ன செயல்களை செய்யலாம்?
குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
குளிகை காலத்தில் என்னென்ன செயல்களை செய்யக்கூடாது?
நகை அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலி செய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்றவற்றை குளிகை நேரத்தில் செய்யக்கூடாது.
English Summary
Gold plan about kuligai time