எருக்கம் இலை முதல் பொங்கல் வரை…! - ரத சப்தமியில் கிடைக்கும் அரிய புண்ணியம்...!
From Calotropis leaves Pongal rare blessings gained Ratha Saptami
இந்து சமயத்தில் சூரிய வழிபாட்டின் உச்ச நாளாகக் கருதப்படும் மிகப் புனிதத் தினமே ரத சப்தமி. அமாவாசைக்குப் பின் வரும் ஏழாவது திதி ‘சப்தமி’ என அழைக்கப்படுகிறது. தை அமாவாசைக்குப் பின் வரும் இந்த சப்தமி தினம், சூரிய பகவான் பூமியில் அவதரித்த திருநாளாகப் போற்றப்படுகிறது.
அதனால் இந்நாளை ‘சூரிய ஜெயந்தி’ என்றும் பெருமையுடன் கொண்டாடுகிறார்கள்.புராணக் கதைகளில், காஷ்யப முனிவரின் மனைவி அதிதி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, ஒரு அந்தணருக்கு தாமதமாக உணவு அளித்ததற்காக கடுமையான சாபம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால் முனிவரின் தெய்வீக வார்த்தைகளால், அவளது கருவிலிருந்து அழிவில்லாத ஒளிவடிவ மகனாக சூரியன் அவதரித்தார். அந்த புனித அவதார தினமே ரத சப்தமியாக வரலாற்றில் நிலைத்திருக்கிறது.இந்த ஆண்டு ரத சப்தமி மார்கழி மாதம் 11-ம் நாள், ஜனவரி 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தங்கத் தேரில் ஆகாயப் பயணம் செய்யும் சூரிய பகவானை நினைத்து, இந்நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
ரத சப்தமி அன்று, சூரியனுக்கு உகந்த ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராடினால் உடல் ஆரோக்கியம் பெருகும்; செல்வ வளம் கூடும் என்று நம்பப்படுகிறது. இந்நாளில் செய்யப்படும் தர்மம் பல மடங்கு புண்ணியமாக மாறும். புதிய தொழில் தொடங்கினால் விருத்தி ஏற்படும்; பெண்கள் உயர்நிலையை அடைவர்; விதவைகள் இந்த விரதம் இருந்தால் அடுத்த பிறவிகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
சூரிய உதய வேளையில் புனித நீராடி விரதம் இருந்தால், வாழ்க்கையில் செழிப்பு பெருகும் என்பதும், சிவப்பு வஸ்திரம் அணிவித்து, சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் சூரிய தோஷங்கள் விலகும் என்பதும் ஜோதிட சாஸ்திரத்தின் வாக்கியம்.சூரியனுக்கு உகந்த தானியம் கோதுமை.
ஆகையால் நைவேத்தியத்தில் கோதுமை உணவு சிறப்பு. அதேபோல், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமாக படைத்து, பிறருக்கு வழங்குவது அளவற்ற புண்ணியத்தைத் தரும். வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும் தேர்க் கோலம் போடுவது பாரம்பரிய வழக்கம்.
திருமாலின் அம்சமே சூரியன் என்பதால், பெருமாள் கோவில்களில் அந்த நாளில் சூரிய பிரபையில் எம்பெருமான் எழுந்தருளும் அபூர்வ தரிசனம் நடைபெறும். இந்த விரதம் நீண்ட ஆயுளையும், குறையாத ஆரோக்கியத்தையும், சுமங்கலித்துவ நிலைத்தன்மையையும் வழங்கும் என நம்பப்படுகிறது.
ரத சப்தமி தினத்தில், சூரியனை நோக்கி “ஓம் நமோ ஆதித்யாய… ஆயுள், ஆரோக்கியம், புத்திர பலம் தேஹிமே சதா!” என்று பிரார்த்தனை செய்தால் வாழ்வில் ஒளி பெருகும்.பொங்கல் நாளிலும், ரத சப்தமியிலும் மட்டுமல்ல தினமும் சூரியனை வணங்கி, தீவினை என்னும் இருளை அகற்றி, நன்மை என்னும் ஒளியை வாழ்க்கையில் பரப்புவோம்.
English Summary
From Calotropis leaves Pongal rare blessings gained Ratha Saptami