இந்து மதம் என்றால் ஏன் இந்த ஒவ்வாமை...? - நயினார் நாகேந்திரன் சாட்டையடி கேள்வி...!
Why there this allergy Hinduism Nainar Nagendran whipping question
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் பேசிய விதம் மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அந்த பதிவில், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிற மதத்தினரின் வாழ்த்து முறைகளை பயன்படுத்திய அமைச்சர், இந்து மத நம்பிக்கைகளுக்கு உரிய வாழ்த்து முறையை வேண்டுமென்றே தவிர்த்ததாகக் கூறியுள்ள அவர், இதுபோன்ற அணுகுமுறை மத நல்லிணக்கத்திற்கு உகந்ததல்ல என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், அனைவருக்குமான ஆட்சி என்று கூறிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதே எதிர்மறையான அணுகுமுறையை வெளிப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதுபோன்ற செயல்கள் சமூக ஒற்றுமையை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், அந்த துயரச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை உடனடியாக நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்காதவர்கள், தற்போது தாமதமாக கரூருக்கு வந்து ஆறுதல் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிகழ்வில்கூட மத அடிப்படையிலான அரசியல் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், இத்தகைய செயல்பாடுகளை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகம் ஆன்மிக பாரம்பரியம் மிக்க மண் என்றும், தமிழ் இலக்கியங்கள், இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் சிவன், திருமால், முருகன் உள்ளிட்ட இந்து தெய்வ வழிபாட்டு மரபுகளுடன் பின்னிப் பிணைந்துள்ளன என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாக்கு வங்கி அரசியலை முன்னிறுத்தி, ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளை புறக்கணிக்கும் வகையில் அரசு செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், இதுபோன்ற அணுகுமுறைகளுக்கான அரசியல் விளைவுகளை சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் சந்திக்க நேரிடும் என்றும் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Why there this allergy Hinduism Nainar Nagendran whipping question