மின்கட்டணம் திடீர் உயர்வு ஏன்...? 2,719 இணைப்புகளில் நடந்த குழப்பத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அமைச்சர் நிர்மல்குமார்...!
Why sudden increase electricity tariffs Minister Nirmal Kumar brought light confusion that occurred 2719 connections
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு வீடுகளுக்கான மின்கட்டணம் திடீரென அதிகரித்தது ஏன்? என்ற கேள்வி சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டது.

மின்கட்டண உயர்வு தொடர்பாக அமைச்சர் ஒரு தகவலை தெரிவிக்கிறார்; நிர்வாகம் வேறு தகவலை தெரிவிக்கிறது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.
இதற்கு சட்டப்பேரவையில் பதிலளித்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், மின்வாரியம் தன்னிச்சையாக 3 லட்சத்துக்கும் அதிகமான மின் இணைப்புகளை மறுஆய்வு செய்தபோது, 2,719 இணைப்புகளில் கணக்கீட்டு விவரங்கள் பொருந்தாமல் இருந்தது கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.
தவறான கணக்கீட்டின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.மேலும், வீடுகளின் மின் அளவீட்டை நேரடியாக பதிவு செய்யாமல், முந்தைய அளவீட்டின் அடிப்படையில் கணக்கிடும் முறையான அட்டவணை அளவீடு நடைமுறையில் இருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இனிமேல் ஒவ்வொரு இணைப்பிற்கும் நேரடியாக மின் அளவீடு செய்து பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.செய்தியாளர் சந்திப்புகளில் தாம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதாக செந்தில் பாலாஜி கூறியிருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் நிர்மல்குமார், கடந்த கால மின்துறை நிர்வாகம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாக தெரிவித்தார்.
45 ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் மின்துறைக்கு 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டதாகவும், 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு மின்துறை அமைச்சராக இருந்த ஒருவர் சிறைக்குச் சென்றதாகவும், அதன்பின்னர் அடுத்தடுத்து பலர் மின்துறை அமைச்சராக பொறுப்பு வகித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரிய முறைகேடுகள் தொடர்பான விளக்கக் குறிப்பை தாம் முழுமையாக படித்ததாக தெரிவித்தார். அதில் 5 பக்கங்களில் மட்டுமே தரவுகள் இடம்பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள பகுதிகளில் போதிய புள்ளிவிவரங்கள் இல்லாமல் பழைய குறிப்புகளே இடம்பெற்றுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், 3,437 களப்பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை அவர்களில் யாரும் பணியிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இதனால், மின்துறை நிர்வாகம் தொடர்பாக ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே சட்டப்பேரவையில் மீண்டும் கடும் விவாதம் ஏற்பட்டது.
English Summary
Why sudden increase electricity tariffs Minister Nirmal Kumar brought light confusion that occurred 2719 connections