வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்தவர் சூர்யா அவரது மதிப்பு தெரியும்! நடிகை ராதிகா ஓபன் டாக்!
Suriya has faced many struggles in life his true worth is evident Actress Radhika speaks candidly
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ராதிகா. கதாநாயகியாக திரைப்பயணத்தை தொடங்கிய அவர், தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து அசத்தி வருகிறார். இந்த ஆண்டில் ‘தாய் கிழவி’ மற்றும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், ரூ.150 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து படக்குழு சார்பில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ராதிகா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “இந்தப் படத்துக்கு இவ்வளவு பெரிய ஆதரவை கொடுத்ததற்காக நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். படத்தில் சிறிய சலிப்பான காட்சிகள் இருந்தால்கூட ரசிகர்கள் உடனே அதை சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் இந்தப் படம் விறுவிறுப்பாக இருந்தது. அனைவரும் ரசித்தார்கள். அதற்கு முக்கிய காரணம் இயக்குநர்தான்” என்றார்.
மேலும், சூர்யா இந்தக் கதையில் நடிக்க எப்படி சம்மதித்தார் என்பது குறித்தும் தான் இயக்குநரிடம் கேட்டதாக ராதிகா தெரிவித்துள்ளார்.
“பல ஹீரோக்களுடன் நான் பணியாற்றியிருக்கிறேன். அவர்கள் எப்படி யோசிப்பார்கள், அவர்களின் சிந்தனை முறை எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் இந்தக் கதையை சூர்யாவிடம் சொன்னீர்களா, அவர் எப்படி ஓகே சொன்னார் என்று இயக்குநர் வெங்கியிடம் கேட்டேன்” என அவர் கூறினார்.
படத்தின் கதாநாயகி தேர்வு குறித்தும் ராதிகா பேசினார். மமிதா பைஜூவை ஏற்கனவே அவரது நடிப்புக்காக ரசித்ததாகவும், அவர் இப்படத்தின் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டதை அறிந்ததும் சரியான நடிகை கிடைத்துவிட்டதாக தான் நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
“மமிதா பைஜூவை நான் மம்மி என்றுதான் அழைப்பேன். அந்தக் கதாபாத்திரம் படத்தில் மிகவும் முக்கியமானது. சரியான நடிகையை எப்படி தேர்வு செய்யப் போகிறீர்கள் என்று இயக்குநரிடம் கேட்டேன். பின்னர் மமிதா பைஜூதான் கதாநாயகி என்று தெரிந்ததும், ‘சரியான பெண்ணை கண்டுபிடித்துவிட்டோம்’ என்று கூறினேன்” என்றார்.
இயக்குநர் வெங்கி மிகச்சிறிய உணர்வுகளைக்கூட அழகாக கையாண்டதாக பாராட்டிய ராதிகா, படத்தின் மீதான விமர்சனங்களும் பெரும்பாலும் நேர்மறையாக இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து சூர்யாவை பற்றி பேசிய அவர், “தனிப்பட்ட வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்தவர் சூர்யா. தனது சொந்த முயற்சியால்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். பொதுவெளியில் அதிகம் பேசமாட்டார். அவருக்கு பெரிய நண்பர்கள் வட்டமும் இல்லை. ஆனால் அவருக்கான மதிப்பு அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்தில் சூர்யா அற்புதமாக நடித்திருந்தார். அழகாகவும் இருந்தார்” என்று பாராட்டினார்.
‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் வெற்றிக்கு இயக்குநரின் திரைக்கதை மற்றும் நடிகர்களின் பங்களிப்பு முக்கிய காரணம் என ராதிகா கூறியிருப்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
English Summary
Suriya has faced many struggles in life his true worth is evident Actress Radhika speaks candidly