'விஜய்யின் ஜனநாயக முழக்கம்'...! சட்டப்பேரவை எப்படி இருக்க வேண்டும்...? - முதல்வர் கொடுத்த பக்கா விளக்கம்...!
Vijay democratic slogan How should Legislative Assembly be Chief Minister clear explanation
தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ள சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில், தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதேபோல், துறையூர் தொகுதியை சேர்ந்த தவெக உறுப்பினர் எம். ரவிசங்கர் பேரவை துணைத் தலைவர் பதவிக்காக தனது மனுவை சமர்ப்பித்தார்.இந்த இரு முக்கிய பதவிகளுக்கும் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படாததால், ஜே.சி.டி. பிரபாகரும், எம். ரவிசங்கரும் போட்டியின்றி ஒருமனதாக இன்று தேர்வு செய்யப்பட்டனர்.

இதன் மூலம் சட்டப்பேரவையில் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மரபுப்படி, அவை முன்னவர் செங்கோட்டையனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் இணைந்து ஜே.சி.டி. பிரபாகரை அழைத்துச் சென்று சட்டப்பேரவைத் தலைவர் இருக்கையில் அமரவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சேர்ந்த உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்று புதிய சபாநாயகருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.இதையடுத்து, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சட்டமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றிய முதல்-அமைச்சர் விஜய், சபாநாயகர் பதவியின் வரலாற்றை சுவாரசியமாக எடுத்துரைத்தார்.
அவர் பேசியதாவது,"இங்கிலாந்தில் மன்னராட்சி நிலவிய காலகட்டத்திலேயே நாடாளுமன்ற நடைமுறை உருவானது. மன்னர் விரும்பிய சில தீர்மானங்களை நாடாளுமன்றம் நிராகரித்தபோது, அந்த முடிவை நேரடியாக மன்னரிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு இருந்தது.
அது மிகுந்த துணிச்சல் தேவைப்படும் பொறுப்பாக கருதப்பட்டது.அந்தக் காலத்தில் மன்னருக்கு மரண தண்டனை வழங்கும் அதிகாரம் இருந்ததால், தனது விருப்பத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தின் கருத்தை தெரிவித்த சபாநாயகர்கள் கடுமையான தண்டனைகளை எதிர்கொண்டதாக வரலாறு தெரிவிக்கிறது.
இதனால் சபாநாயகர் பதவியை ஏற்க பலர் தயக்கம் காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.புதிய ஆட்சி அமைக்கப்படும் தருணங்களில் சபாநாயகர் அறிவிக்கப்பட்டவுடன் அவர் அச்சத்தால் வெளியேற முயல்வார். அப்போது அவை முன்னவரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து அவரை அழைத்து வந்து இருக்கையில் அமரவைத்தனர்.
அந்த வரலாற்று மரபே இன்றளவும் ஜனநாயக அடையாளமாக தொடர்கிறது.இந்த பேரவை ஜனநாயகத்தின் இதயத் துடிப்பாக செயல்பட வேண்டும். மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியே உண்மையான மக்களாட்சி என்று ஆபிரகாம் லிங்கன் தெரிவிக்கவுள்ளார்.தவெக உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவார்கள்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் திட்டங்களை செயலாக்கும் பெரும் பொறுப்பு இந்த பேரவைக்கு உள்ளது.சட்டமன்ற நடவடிக்கைகள் ஒழுங்குடனும் கண்ணியத்துடனும் நடைபெற வேண்டும். ஒரே ஒரு உறுப்பினர் கொண்ட கட்சிக்கும் பேரவையில் உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
இந்த அவையில் அனைவரும் சமமானவர்கள். சட்டமன்ற மரபுகளும் ஜனநாயக நெறிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.இந்த ஆட்சியால் அதிகமான மக்கள் பயன் பெற்றுள்ளனர் என்று மக்கள் பெருமையுடன் கூறும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
English Summary
Vijay democratic slogan How should Legislative Assembly be Chief Minister clear explanation