வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு; திருவள்ளூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை; ஆட்சியர் அறிவிப்பு..!
Thiruvallur District Collector announces three tier security and a ban on drone flights at centers housing EVMs
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 23) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு சீலிடப்பட்டுள்ளன.
பின்னர், வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில் பாதுகாப்பு அறைகள் முறையாக சீலிடப்பட்டன. அத்துடன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க, விரிவான மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அத்துடன், 24 மணி நேரமும் செயல்படும் வயர்லெஸ் கண்காணிப்பு அறைகள் மற்றும் நாசவேலை தடுப்பு குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 18 வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் இந்த பாதுகாப்பு பணிகளை சுழற்சி முறையில் மேற்பார்வையிடுகின்றனர்.
இந்த பாதுகாப்பு மைய வளாகங்கள் முழுவதும் 387 சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. மேலும், வேட்பாளர்களின் முகவர்கள் இந்த கண்காணிப்பை உறுதி செய்யும் வகையில், வளாகத்திற்குள் தனியாக அமைக்கப்பட்டுள்ள திரைகள் மூலம் நேரலையாகப் பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி, வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களின் மேலே ட்ரோன்கள் அல்லது எவ்வித பறக்கும் சாதனங்களும் பறக்கக் கூடாது என 'நோ பிளை ஜோன்' உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் பிரதாப் இது குறித்து தெரிவித்துள்ளதாவது; வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 04, 2026 வரை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் அனைத்தும் முழுமையான பாதுகாப்புடன் தீவிரமாக கண்காணிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
English Summary
Thiruvallur District Collector announces three tier security and a ban on drone flights at centers housing EVMs