திருப்பூர்: ஆஃப்பாயில் விவகாரம் - உணவக ஊழியரை அடித்து, உதைத்து திமுகவினர் மதுபோதையில் அராஜகம்!
THIRUPPUR DMK Member attack Hotel staff
தனியார் உணவகத்தில், மதுபோதையில் வந்த திமுகவினர் ஊழியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிபாளையத்தில் ரபீக் என்பவர் நடத்தும் அசைவ உணவகத்தில், ஜூன் 15ஆம் தேதி இரவு 10 மணியளவில், திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ்குமார் மற்றும் அவரது ஐந்து நண்பர்கள் உணவருந்த வந்தனர். அவர்கள் முட்டை ஆப்பாயில் கேட்டபோது, உணவக ஊழியர் முருகன் வழங்கினார்.
அப்போது, “ஏன் பெப்பர் சேர்க்கவில்லை?” என்று கேட்க, “பேப்பர் பாட்டில் டேபிளில் இருக்கு, நீங்களே சேர்த்துக்கொள்ளலாம்” என ஊழியர் பதிலளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், “பெப்பர் போட்டு தர முடியாதா?” என்று ஆபாசமாக பேசினர். வாக்குவாதம் முற்றி, திமுகவினர் ஊழியரை தாக்கியதாக கூறப்படுகிறது.
சம்பவம் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் ஜூன் 22 அன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலானதும், உடுமலை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
உணவக உரிமையாளர் ரபீக் அளித்த புகாரின் பேரில், திமுகவினர் லோகேஷ்குமார் உள்ளிட்ட ஆறுபேர்மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
THIRUPPUR DMK Member attack Hotel staff