ஆட்சியில் எங்களுக்கு நிகர் யாருமில்லை...! - திமுகவின் அனுபவத்தை முன்வைத்து உதயநிதி அதிரடிப் பேச்சு...!
There no one like us power Udhayanidhi dramatic speech presenting experience DMK
தமிழக அரசியலில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூழ்நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று உற்சாகமாக தொடங்கியது. முதல்நிகழ்வாக சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் எதிர்பார்த்தபடி எந்த எதிர்ப்பும் இல்லாததால், சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை மரபின்படி அவை முன்னவர் செங்கோட்டையனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து ஜே.சி.டி. பிரபாகரின் இரு கைகளையும் பற்றியபடி சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். அந்த தருணம் அவையில் இருந்த உறுப்பினர்களின் கைதட்டலால் உணர்ச்சி மிகுந்த காட்சியாக மாறியது.

இதையடுத்து முதல்-அமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் புதிய சபாநாயகருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.அப்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது,"17-வது சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக நான் ஆற்றும் முதல் உரை இது.
இந்த நேரத்தில், எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்து நம்பிக்கை அளித்த 1.54 கோடி தமிழ்நாட்டு மக்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.புதிய சபாநாயகராகவும், துணை சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ள இருவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் திராவிட முன்னேற்றக் கழகம் வெறும் எதிர்க்கட்சியாக அல்லாமல், மக்களின் நலனுக்காக சிந்திக்கும் ஆக்கப்பூர்வ சக்தியாக செயல்படும். நாங்கள் எப்போதும் கட்டமைக்கும் அரசியலையே முன்னிறுத்துவோம்.முதல்-அமைச்சர் விஜய், திமுக தலைவர் இல்லத்திற்கும், பிற அரசியல் கட்சி தலைவர்களின் இல்லங்களுக்கும் நேரில் சென்று வாழ்த்துகளை பெற்றுள்ளார்.
அந்த அரசியல் நாகரிகமும் பரஸ்பர மரியாதையும் சட்டப்பேரவையிலும் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும்.முதல்-அமைச்சர் விஜய்யும் நானும் ஒரே கல்லூரியில் கல்வி பயின்றவர்கள். ஆனால் ஆட்சி நிர்வாக அனுபவத்தில் திமுக மூத்த அரசியல் இயக்கம்.
அந்த அடிப்படையில் எங்களின் அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் அரசும் செயல்பட வேண்டும். ஏனெனில், எப்போதும் தமிழ்நாட்டு மக்களின் நலனே முதன்மை.சபாநாயகர் அவர்கள் ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியையும் சமநிலையுடன் அரவணைத்து நடத்த வேண்டும்.
அவை மரபுகளுக்கு விரோதமாக செயல்பட்டு சபாநாயகரை சிரமப்படுத்தும் சூழ்நிலையை நாங்கள் உருவாக்க மாட்டோம்.சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி காதுகளாக இருந்தால், எதிர்க்கட்சிகள் மக்களின் குரலாக இருக்க வேண்டும். அந்த சமநிலையில்தான் ஜனநாயகத்தின் பெருமை உயிர்ப்புடன் இருக்கும்.
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் வேறு வேறு அணிகளாக இருந்தாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஒரே பாதையில் பயணிக்க வேண்டும்.அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எப்போதும் முதலிட மரியாதை வழங்கப்பட வேண்டும். பதவியேற்பு விழாவில் ஏற்பட்ட தவறுகள் இனி மீண்டும் நிகழக்கூடாது.
‘வெல்க தமிழ்! வளமுடன் விளங்குக தமிழ்நாடு! மக்களை பிளவுபடுத்தும் சனாதன சிந்தனைகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.
English Summary
There no one like us power Udhayanidhi dramatic speech presenting experience DMK