புதிய ரேஷன் கார்டுக்கு காஸ் ரசீது கட்டாயமா..? இல்லையா..?; தமிழக அரசு விளக்கம்..!
Tamil Nadu government clarifies that gas receipt is not mandatory for new ration cards
புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது முகவரிக்கான சான்றாகக் காஸ் சிலிண்டர் ரசீது கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற குழப்பம் இருந்து வந்தது. இந்நிலையில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட மனுவிற்குப் அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
புதிய குடும்ப அட்டை விண்ணப்பத்துடன் காஸ் சிலிண்டர் இணைப்பு ரசீதைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று துறை ரீதியாக எந்த உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது. மேலும், 2018 வருட மக்கள் சாசனத்தின் படி, தகுதியுள்ள நபர்களுக்கு விண்ணப்பித்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டும் என்ற காலவரையறை நிர்ணயிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாகவும் அத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி, குடும்பத் தலைவர் உட்பட குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டை நகல்களும் கட்டாய ஆவணமாகப் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
அதேவேளையில், இருப்பிட முகவரியை உறுதி செய்வதற்கு மின் கட்டண ரசீது, சொத்துவரி ரசீது, வாடகை ஒப்பந்தப் பத்திரம் அல்லது எரிவாயு நுகர்வோர் ரசீது ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை மட்டுமே முகவரி ஆதாரமாக வழங்கினால் போதுமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpds.gov.in மூலமாகவே ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். இணையதளத்தின் முகப்பில் உள்ள 'மின்னணு அட்டை சேவைகள்' பிரிவில் சென்று புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தமிழக ரேஷன் கடைகளில், 2.22 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.
இதில், 93 லட்சம் முன்னுரிமை கார்டுகள், 18.45 லட்சம் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கான அரிசி, கோதுமையை, மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. அதன்படி, முன்னுரிமை கார்டுக்கு, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா, 5 கிலோ அரிசியும்; அந்தியோதயா கார்டுக்கு, 35 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டவுடன் வழங்கப்படும் குறிப்பு எண்ணைக் கொண்டு அதன் தற்போதைய நிலையைத் தெரிந்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் அல்லது கள ஆய்வாளர் நேரில் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பிறகு, அரசு நிர்ணயித்த 60 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை பயனாளிகளுக்கு வழங்கப்படும்.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu government clarifies that gas receipt is not mandatory for new ration cards