'பதுங்குவது எங்க ரத்தத்திலேயே இல்லை'...! த.வெ.க தலைவர் விஜய்யின் விமர்சனத்திற்கு எ.வ.வேலு மாஸ் பதிலடி...!
Sneaking not our blood EV Velu mass response TVK leader Vijay criticism
தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பின்னணியில் சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும், தனது பயணம் குறித்து பரவி வரும் விமர்சனங்களுக்கு விரிவான விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.5 ஆயிரம் கோடி நிதியில் முறைகேடு நடைபெற்றதாக, அறப்போர் இயக்கம் கடந்த 2022-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தது. அதன் அடிப்படையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, துறை அலுவலர்கள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த ஜூன் 25-ஆம் தேதி அவருடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த எ.வ.வேலு, சிகிச்சை நிறைவடைந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இதய நோய்க்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த மாதம் 15-ஆம் தேதியே சிங்கப்பூர் பயணத்திற்கான நுழைவு அனுமதிக்கு விண்ணப்பித்ததாகவும், அனுமதி கிடைத்ததும் 17-ஆம் தேதி பயணச்சீட்டை முன்பதிவு செய்ததாகவும் கூறினார். ஆனால், பயணம் மேற்கொள்ள இருந்த நாளிலேயே காவலர்கள் சோதனைக்காக வந்ததால், தனது பயணத்தை ஒத்திவைத்து புதிய பயணச்சீட்டை பதிவு செய்ததாகவும் விளக்கமளித்தார்.
சோதனை மேற்கொள்ள வந்த அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவித்த அவர், தனக்கு ஒவ்வாமை, நரம்பியல் மற்றும் இதயம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாக கூறினார். ஜூன் 29-ஆம் தேதி நரம்பியல் சிகிச்சை, ஜூன் 30-ஆம் தேதி வயிறு தொடர்பான சிகிச்சை, ஜூலை 3-ஆம் தேதி இதய பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கான அனைத்து மருத்துவ ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை எப்போது வேண்டுமானாலும் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு உரிய முறையில் பதிலளித்ததாக குறிப்பிட்ட அவர், ஜூலை 3-ஆம் தேதி வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு, 10 நாட்கள் அவகாசம் கோரி கடிதம் அனுப்பியதாகவும், பின்னர் மீண்டும் ஜூலை 9-ஆம் தேதி ஆஜராகுமாறு அழைப்பு வந்ததாகவும் கூறினார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தும், தன்னை ஓடிவிட்டார், ஒளிந்துவிட்டார் என்று சிலர் சித்தரிப்பது உண்மைக்கு புறம்பானது என்றார்."நான் ஓடவில்லை; ஒளியவில்லை; பதுங்கவில்லை. எந்த தவறும் செய்யவில்லை.
தி.மு.க. எங்களை அப்படிப்பட்ட அரசியல் பண்பாட்டில் வளர்க்கவில்லை. வரும் 15-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகி அனைத்து விளக்கங்களையும் அளிப்பேன். சமூக வலைத்தளங்களில் என் பயணம் குறித்து பலரும் கற்பனையான தகவல்களை பரப்பி வருகின்றனர்" என்றும் எ.வ.வேலு தெரிவித்தார்.
English Summary
Sneaking not our blood EV Velu mass response TVK leader Vijay criticism