2 நாளில் ரூ.23.28 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் தகவல்! முழு விபரம்!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மார்ச் 17, 2026 வரை நடத்தப்பட்ட சோதனைகளில் ₹23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, வேட்பாளர்களின் செலவுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன. சட்டசபைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ₹40 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய அனுமதி உள்ளது.

இதற்காக மாவட்ட அளவில் பல்வேறு தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், தேர்தல் கண்காணிப்பு பணிகளை வலுப்படுத்த 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு தொகுதியிலும்

  • 9 பறக்கும் படைகள்

  • 9 நிலை கண்காணிப்பு குழுக்கள்

என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2160 பறக்கும் படைகள் மற்றும் 2160 நிலை கண்காணிப்பு குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இக்குழுக்களுடன் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளும் இணைந்து செயல்படுகின்றன.

மேலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி வைக்கப்பட்ட 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல் 61 வழக்குகள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணத்தை எடுத்துச் செல்லும் போது அதன் மூலம் மற்றும் பயன்பாடு குறித்து ஆவணங்கள் வழங்கப்பட்டால், அது வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கான தொகை அல்ல என அதிகாரிகள் உறுதி செய்த பின்னர் பணம் மீண்டும் உரியவரிடம் வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தற்போது அரசியலில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் அரசு கட்டிடங்களில் இருந்தால் அவை மறைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs 23 crore in cash and goods seized in 2 days Election Commission information Full details


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->