மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
Rain alert school student safty tngovt
பருவமழைக் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து பள்ளிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் பள்ளிக் கட்டடங்களின் மேற்கூரைகள் மற்றும் நீர் தேங்கும் பகுதிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கட்டட பராமரிப்பு மற்றும் புதிய கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்லத் தடை விதிக்க வேண்டும். சேதமடைந்த வகுப்பறைகள் பூட்டப்பட்டு யாரும் அங்கு செல்லாமல் தடுக்கப்பட வேண்டும். தொடர் மழையால் பள்ளி சுற்றுச்சுவர் பாதிக்கப்பட்டிருந்தால் மாணவர்கள் அதன் அருகில் செல்லாமல் கண்காணிக்க வேண்டும்.
மின் இணைப்புகள், மின்கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஆகியவற்றை உடனடியாக பரிசோதித்து, பொறியாளர்களின் உதவியுடன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் பழுதடைந்த மின்சாதனங்கள், விழும் நிலையில் உள்ள மரங்கள் ஆகியவை அகற்றப்பட வேண்டும்.
அதேபோல், நீர் தேக்கத் தொட்டிகள், பள்ளங்கள், திறந்த கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் ஆகியவை பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். பருவமழையால் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால், மாணவர்களுக்கு தேவையான அறிவுரை வழங்கி, சிகிச்சை வசதி ஏற்படுத்த வேண்டும்.
இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பள்ளி வளாகத்திலும் வெளியிலும் பின்பற்றப்படுகிறதா என்பதை தலைமை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும். மேலும், இதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Rain alert school student safty tngovt