நீதிபதி உத்தரவு எதிரொலி..40 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் மண்டப கடைகள் இடித்து அகற்றம்!
Echo of the judges order After 40 years the temple hall shops demolished and removed
40 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மண்டப கடைகள் இடித்து அகற்றம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கன்னியம்பலம் மண்டபம், திருவிழாவின்போது 10 நாட்களும் அம்மன் வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும்போது பழமையான இந்த மண்டபத்தில் அமர்ந்து இளைப்பாறுவது வழக்கம்.
அதுமட்டுமின்றி திருக்கார்த்திகை தீப திருவிழா அன்று சொக்கப்பனை கொளுத்தி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.மேலும் பண்டைய காலத்தில் இந்த கோவிலுக்கு சாமி கும்பிட வரும் வெளியூர் பக்தர்கள் கோவிலில் வழங்கப்படும் கட்டுசோறு உணவை வாங்கி சாப்பிட்டு விட்டு இந்த கன்னியம்பலம் மண்டபத்தில் மதிய வேளையில் தூங்கி இளைப்பாறுவது வழக்கம்.
அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த கன்னியம்பலம் மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை 8 கடைகள் கட்டி வியாபாரம் செய்வதற்கு தனியாருக்கு அனுமதி வழங்கி உள்ளது.
இதனால் இந்த கன்னியம்பலம் மண்டபம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக திருவிழா காலங்களில் பயன்படுத்த முடியாமல் மூடப்பட்டு கிடந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து கன்னியம்பலம் மண்டபத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை இடித்து அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கன்னியம்பலம் மண்டபத்தில் கட்டப்பட்டு உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் இந்த கடைகளை இடித்து அப்புறப்படுத்த ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு வந்தனர். இதைப் பார்த்த வியாபாரிகள் கொதிப்படைந்தனர். ஆனால் அவர்கள் கடைகளை அப்புறப்படுத்தவில்லை.
இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று ஜேசிபி எந்திரம் மூலம் கன்னியம்பலம் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த கடைகளை இடித்து அப்புறப்படுத்தினார்கள்.
English Summary
Echo of the judges order After 40 years the temple hall shops demolished and removed