'தமிழகத்தில் கூடுதல் பேருந்துகளை உடனடியாக இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'; பிரேமலதா வலியுறுத்தல்..!
Premalatha urges the government to take immediate action to operate additional buses in Tamil Nadu
தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், உரிய நேரத்திற்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படாததாலும் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். அதிகப்படியான பயணிகள் பயன்படுத்தும் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை உடனடியாக இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
''தமிழகத்தின் முக்கியமான பேருந்து நிலையங்களான சென்னை, திருச்சி, மதுரை போன்ற பல பகுதிகளில் இருந்து பல்வேறு இடங்களுக்கு போதிய அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. பல முக்கிய வழித்தடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், உரிய நேரத்திற்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படாததாலும் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனவே, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் இப்பிரச்சினையில் தனி கவனம் செலுத்த வேண்டும். முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் அதிகப்படியான பயணிகள் பயன்படுத்தும் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை உடனடியாக இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து சேவையை மேம்படுத்தி, மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பண்டிகை காலங்கள், பள்ளி திறப்பு நாட்கள் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இதனை அரசு முன்கூட்டியே கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலனையும் தேவையையும் முன்னிறுத்தி கூடுதல் பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும். இதன் மூலம் மக்களின் போக்குவரத்து தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.
English Summary
Premalatha urges the government to take immediate action to operate additional buses in Tamil Nadu