'கடந்த ஆட்சியைப் போல சாதிய வன்முறைகள் தொடர்வது அழகல்ல'; தவெக அரசு அமல்படுத்த 07பரிந்துரைகள் முன்வைத்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித்..!
Director Pa Ranjith states that the continued occurrence of caste based violence does not befit the DMK government
''தொடர் சாதிய வன்முறைகள் கடந்த ஆட்சியைப் போல தற்போதைய புதிய ஆட்சியிலும் தொடர்வது ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க விரும்புகிற ஓர் அரசுக்கு அழகல்ல. இதை தவெக தலைமையிலான அரசு சரியாகப் புரிந்துகொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும்'' என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
''தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பாபாசாகேப் அம்பேத்கர், இமானுவேல் சேகரன், பசுபதி பாண்டியன் ஆகியோரின் திருவுருவப் படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டதால் பட்டியல் சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுபோன்ற வன்முறைகள் இப்பகுதியில் நடப்பது புதிதல்ல.
இச்சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கழிந்துவிட்டன. ஆயினும் இதற்கான தகுந்த நீதியாக கைது நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் கொடுப்பது மட்டுமே இதை முற்றிலும் தடுத்துவிட முடியுமெனக் கருதிவிட முடியாது.
மேலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான பின்னணி என்ன? இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசினுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நேர்மையான விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, இதுபோன்று தொடர்ந்து சாதிவெறி தலைவிரித்தாடுகின்ற பகுதிகளில் நியமித்திடவும் தற்போதைய தவெக தலைமையிலான அரசு ஆவண செய்திட வேண்டும்.
தொடர் சாதிய வன்முறைகள் கடந்த ஆட்சியைப் போல தற்போதைய புதிய ஆட்சியிலும் தொடர்வது ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க விரும்புகிற ஓர் அரசுக்கு அழகல்ல. இதை தவெக தலைமையிலான அரசு சரியாகப் புரிந்துகொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்துவதோடு, அதற்குச் சில பரிந்துரைகளையும் நாங்கள் முன்வைக்க விரும்புகிறோம்.
குறிப்பாக, தென்தமிழக இளைஞர்களில் குறிப்பிட்ட சில சமூகப் பிரிவினரிடையே வன்முறைப் போக்கு அதிகரித்து வருகிறது. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான இந்த வன்முறைகள், பொதுவான குற்றங்களோடு ஒப்பிட்டுக் கடந்து போகக்கூடியவை அல்ல. இதன் பின்னாலிருக்கும் காரணங்கள், சமூக உளவியல் உட்பட பல நிலைகளில் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.
குற்றப் பின்னணி உள்ளவர்களைக் கைது செய்தல், வழக்கு தொடுத்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளோடு இதனை நிறுத்திக்கொள்ளாமல், கீழ்க்கண்ட சில பரிந்துரைகளையும் அரசு அமல்படுத்த வேண்டும் பட வேண்டும்.
1. தென்மாவட்டங்களில் சாதிய வன்முறை அதிகம் நிகழும் பகுதிகளை அடையாளங்கண்டு, மாவட்ட அளவில் சாதிய மோதல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். இதில் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடம்பெற வேண்டும்.
2. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு ஆய்வு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதைத் தவிர்க்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
3. கடந்த திமுக ஆட்சியில், பள்ளிகளில் அதிகரித்த சாதியப் பாகுபாடுகளைக் களைய ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் கமிஷனின் பரிந்துரைகளின் தற்போதைய நிலை கண்டறியப்பட வேண்டும். அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை உறுதி செய்ய வேண்டும்.
4. பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இந்திய அரசியலமைப்பு, சமூக நீதி, சாதி எதிர்ப்பு வரலாறு, பாபாசாகேப் அம்பேத்கர் சிந்தனைகள் போன்றவை கட்டாயமான குடியுரிமைக் கல்வியின் ஒரு பகுதியாக வலுப்படுத்தப்பட வேண்டும்.
5. சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்யும் வகுப்புகள், நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். சமூக அறிவு, விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பொதுப் புழங்கு வெளிகளை அரசு அதிகப்படுத்த வேண்டும். சாதிய வன்முறைகள் அதிகம் நிகழும் பகுதிகளில் இளைஞர்களுக்கான விளையாட்டு மையங்கள், நூலகங்கள், கலை மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
6. தென்மாவட்ட காவல் நிலையங்களில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த காவலர்களையும் காவல் அதிகாரிகளையும் பணியமர்த்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
7. தென் தமிழகம் முழுக்க சாதியக் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களில் பெரும்பாலானோர், சமூக வலைதளங்களில் சாதியப் பெருமிதத்தைக் கொண்டாடும் கலாச்சாரத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் சாதி வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்களைக் கண்காணிக்க மாநில அளவில் சிறப்பு இணையக் கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Director Pa Ranjith states that the continued occurrence of caste based violence does not befit the DMK government