ஓஎஸ்எம் முறை காரணமாக மதிப்பெண்கள் குறைந்ததாக குற்றச்சாட்டு; சிபிஎஸ்இ தலைவர், செயலர் அதிரடி மாற்றம்; விசாரணைக் குழு அமைப்பு..!
Inquiry Committee Constituted Regarding OSM Issue
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓஎஸ்எம் முறை (On-Screen Marking - OSM) காரணமாக மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக மாணவர்கள் பலர் குற்றம்சாட்டி இருந்தனர்.
இந்த புகார்கள் காரணமாக, சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலரை மத்திய அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்துள்ளது. அத்துடன், இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு நபர் விசாரணைக் குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.
வேதாந்த் என்ற ஒரு மாணவர் மறுமதிப்பீட்டுக்காக விடைத்தாள் கோரி இருந்த நிலையில், அவருக்கு வேறொருவரின் விடைத்தாள் கொடுக்கப்பட்டது குறித்து சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அவரது சமூக ஊடகக் கணக்கு பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், வேதாந்த் உள்ளிட்ட சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வெழுதி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலருடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் கலந்துரையாடினார்.
இதனையடுத்து இந்த விவகாரம் பெரிதாக விவாதிக்கப்பட்ட நிலையில், சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் செயலர் ஹிமான்ஷு குப்தா ஆகியோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஓஎஸ்எம் முறையில் எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க, ஒரு நபர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு திறன் மேம்பாட்டு ஆணையத்தின் (CBC) தலைவரான எஸ்.ராதா சவுகான் தலைமை தாங்குவார் என்றும், பிற அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் உதவியைப் பெறும் அதிகாரம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இக்குழுவுக்குத் தேவையான செயலக உதவிகளை சிபிஎஸ்இ வழங்கும் எனவும், இவ்விவகாரம் குறித்த அறிக்கையை 30 நாட்களுக்குள் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையிடம் இக்குழு சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Inquiry Committee Constituted Regarding OSM Issue