80-வது சுதந்திர தின விழா; கோட்டை கொத்தளத்தில் நாளை தேசிய கொடி ஏற்றவுள்ள முதல்வர் விஜய்; பாதுகாப்பு பணிக்காக 10 ஆயிரம் போலீசார் குவிப்பு..!
CM Vijay will hoist the national flag at the fort ramparts tomorrow on the occasion of the 80th Independence Day celebrations
நாட்டின் 80 வது சுதந்திர தின விழா நாளை நாடும் நமுழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாளை கோட்டை கொத்தளத்தில் தமிழகத்தின் 07 வது முதல்வராக உள்ள விஜய் தேசிய கொடி ஏற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின்போது அப்துல் கலாம், கல்பனா சாவ்லா உள்ளிட்ட பெயரில் பல்வேறு விருதுகளையும் முதல்வர் விஜய் வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
ஆங்கிலேயர்களின் ஆளுமையின் கீழ் இருந்த இந்தியா, 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. இதனை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் குடியரசு தினத்தைப்போல, சுதந்திர தினத்திலும் மாநில ஆளுநர்களே தேசிய கொடியை ஏற்றும் வழக்கம் இருந்தது. 1974-ஆம் ஆண்டு முதல் குடியரசு தினத்தில் மாநில ஆளுநர்களும், சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்களும் தேசிய கொடியை ஏற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், அப்போதைய முதல்வர் கருணாநிதி. அவர்1974-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் தேதி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அன்று முதல், ஒவ்வொரு மாநில முதல்வர்களும் சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்றி வருகிறார்கள். அதன்படி, நாட்டின் 80-வது சுதந்திர தினம் நாளை (15ம்தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளன. அதையொட்டி, சென்னை தலைமைச்செயலகம் செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றவுள்ளார். முன்னதாக, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொள்கிறார்.

இந்த விழாவில் தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த 'தகைசால் தமிழர்' என்ற பெயரிலான விருதும், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை முதல்வர் விஜய் வழங்கவுள்ளார். அதேபோல், அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் 'அப்துல் கலாம்' விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கா'கல்பனா சாவ்லா' விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள், முதல்வரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் முதல்வர் விஜய் வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டை, ரயில் நிலையங்கள், விமான நிலையம், மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
English Summary
CM Vijay will hoist the national flag at the fort ramparts tomorrow on the occasion of the 80th Independence Day celebrations