திமுகவில் 10 மாவட்ட செயலாளர்கள் பதவிநீக்கம்! தங்கம் தென்னரசு குழுவுடன் ஆலோசித்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் நடந்தது என்ன?
10 DMK District Secretaries Removed from Post Stalin Consults with Thangam Thennarasu Team What Transpired at Arivalayam
திமுகவில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அந்தக் கூட்டத்துக்குப் பிறகு கட்சியில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என அறிவாலய வட்டாரங்களில் பேசப்படுகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை முதல் இரவு வரை, தங்கம் தென்னரசு தலைமையில் அமைக்கப்பட்ட மறுசீரமைப்பு பரிந்துரைக் குழுவினருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தக் குழு கட்சி அமைப்பு தொடர்பான அறிக்கையை தலைமைக்கு வழங்கியிருந்த நிலையில், அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து தற்போது அடுத்தகட்ட ஆலோசனை நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.
இந்த மறுசீரமைப்பின் முக்கிய அம்சமாக, திமுகவில் உள்ள மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சுமார் 78 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், அந்த எண்ணிக்கையை 100 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கட்சிப் பணிகளில் தீவிரமாக செயல்படாத சுமார் 10 மாவட்டச் செயலாளர்களை அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றவும், அவர்களுக்கு மாற்றுப் பொறுப்புகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது சில மாவட்டச் செயலாளர்கள் 2 முதல் 6 சட்டமன்றத் தொகுதிகள் வரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை உள்ளது. இதனை மாற்றி, அதிகபட்சமாக ஒரு மாவட்டச் செயலாளர் கட்டுப்பாட்டில் 3 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே இருக்கும் வகையில் அமைப்பை மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் மூலம் நீண்ட காலமாக மாவட்ட அளவில் நிலவி வரும் மூத்த நிர்வாகிகளின் ஆதிக்கத்தை குறைப்பதுடன், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க முடியும் என திமுக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது.
அதேபோல், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையையும் அதிகரிப்பது குறித்து ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பல்வேறு சமூக மற்றும் அமைப்பு ரீதியான பிரதிநிதித்துவத்தை கட்சிக்குள் அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, சமீபத்தில் திமுகவுடன் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட புதியவர்களுக்கும் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், ஏற்கனவே கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் சீனியர்களை முழுமையாக ஓரங்கட்டாமல், அவர்களுக்கு மாற்றுப் பொறுப்புகளை வழங்கி மறுசீரமைப்பை மேற்கொள்ள திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இளைஞர்கள், பெண்கள் மற்றும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது ஒருபுறம் இருந்தாலும், மூத்த நிர்வாகிகளின் எதிர்ப்பை தவிர்ப்பதும் தலைமைக்கு முக்கிய சவாலாக உள்ளது. எனவே, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாத வகையில் பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்க ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
இந்தச் சூழலில், ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ள திமுக தலைமை செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கூட்டத்துக்குப் பிறகு மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், புதிய பொறுப்புகள், துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கை உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு திமுகவுக்குள் அதிகரித்துள்ளது.
English Summary
10 DMK District Secretaries Removed from Post Stalin Consults with Thangam Thennarasu Team What Transpired at Arivalayam