ஈபிஎஸ்-க்கு பெருகும் ஆதரவு! சிறிய கட்சிகளை கண்டு அலறும் தாமரைக் கட்சி!
Perunthalaivar makkal katchi announced to AIADMK alliance
அதிமுக மற்றும் தமிழக பாஜக இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக நினைத்து வந்த உரசல் போக்கு இறுதியில் கூட்டணி முடிவு என்ற நிலைக்கு தள்ளியது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்து வந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் முடிவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதிமுகவின் இந்த நிலைப்பாட்டை திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல கட்சிகள் வரவேற்றுள்ளன. பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய கட்சிகள் அதிமுகவின் தைரியமான இந்த நிலைப்பாட்டை வரவேற்பதாக கருத்தை தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில் அதிமுக தலைமைக்கான கூட்டணியில் இடம் பெற்றிருந்த புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் தொடர்ந்து பயணிப்பேன் என திட்டமிட்டமாக தெரிவித்து இருந்தார்.
அவரைத் தொடர்ந்து தற்போது பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தனது முழு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''தமிழக அரசியலில் அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக தலைவர்களையும், முன்னாள் அமைச்சர்களையும் விமர்சனம் செய்து வந்த தமிழக பாஜக தலைவருக்கு சரியான பாடத்தையும், படிப்பினையும் அதிமுக தலைமை கற்றுக் கொடுத்துள்ளது.

அரசியலில் ஆணவம் கூடாது, அடக்கமும் பொறுமையும் அவசியம் என்பதை அனுபவம் தான் கற்றுக் கொடுக்கும் என்பதுக்கேற்ப சம்பவங்கள் நடந்தேறி உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டில் இருந்து விலகி பாஜகவுடன் உறவை முடித்துக் கொண்டு அதிமுகவுடன் பெருந்தலைவர் மக்கள் கட்சி தொடர்ந்து பயணிக்கும்.
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அதிமுக கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் என தெரிவித்த தனபாலன் அதிமுக எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் முடிவுக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சி துணை நிற்கும் என அறிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறிய கட்சிகள் தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் தமிழக பாஜக தலைமை செய்வதறியாது தவித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Perunthalaivar makkal katchi announced to AIADMK alliance