பழனி முருகன் கோவில் நில முறைகேடு: ஜூலை 25 அன்று திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...!
Palani Murugan Temple land scam AIADMK announces protest Dindigul July 25th
பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் தனியாருக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, நடுநிலையான அமைப்பின் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தை கண்டித்து பழனியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த மடத்திற்குச் சொந்தமான நிலம் தொடர்பாக முந்தைய திமுக ஆட்சிக் காலத்திலிருந்தே பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு ஒன்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஏற்கனவே நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்திருப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் முக்கிய நபர்கள் 3 பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை காவலர்கள் தேடி வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான நிலம் தொடர்பான விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டுமெனில், அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத நடுநிலையான அமைப்பின் மூலம் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மக்களின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தியும், பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அரசைக் கண்டித்தும், அதிமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில் வரும் 25-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பழனி மயில் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் அதிமுக பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெறும்.
இதில் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய மற்றும் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
Palani Murugan Temple land scam AIADMK announces protest Dindigul July 25th