அடுத்த டுவிஸ்ட்.. ஈபிஎஸ்.,க்கு எதிரான திமுக பெண் தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் சாட்சி..!!
OPS witness in case against EPS
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் போது போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் சொத்து விபரங்களை வேட்புமனுவுடன் தாக்கல் செய்தனர். அதன்படி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமியும் வேட்புமனுவுடன் சொத்து விபரங்களை தாக்கல் செய்தார். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றியும் பெற்றார்.

இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி தனது வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்ததாக புகார்கள் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த திமுக பெண் நிர்வாகி மிலானி என்பவர் சேலம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் "கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு பிரமாண பத்திரத்தில் எடப்பாடி பழனிச்சாமி சொத்து விபரங்களை தவறாக குறிப்பிட்டு சொத்து விபரங்களை மறைத்துள்ளார்.
அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டசத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம் புகார் குறித்து விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

மேலும் இதுதொடர்பான விபரங்களை மே மாதம் 26ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி விசாரணை நடைபெற்ற நேற்று எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் தேர்தல் பிரமாண பத்திரம் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான சாட்சியாக ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கப்பட்டுள்ளார். புகார்தாரர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணை அறிக்கை நேற்று சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் விரைவில் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளது.
English Summary
OPS witness in case against EPS