விதை போட்டவனுக்குத்தான் பழம்...! திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் வதந்திக்கு லாரன்ஸ் வைத்த முற்றுப்புள்ளி...!
one who sows the seed reap fruit Lawrence puts an end Trichy East by election rumours
தமிழ் திரையுலகில் நடிகராகவும், நடன இயக்குநராகவும் தனித்துவமான இடத்தை பிடித்திருப்பவர் ராகவா லாரன்ஸ். சமூக சேவையிலும் தனக்கென அடையாளம் பதித்துள்ள அவர், அரசியல் வருகை குறித்து அண்மையில் வெளியான தகவல்கள் பெரும் கவனத்தை ஈர்த்தன.தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் காரணமாக, திருச்சி கிழக்கு உள்ளிட்ட காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இந்த சூழலில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் ராகவா லாரன்ஸ் களமிறங்க உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து அண்மையில் கருத்து பகிர்ந்த ராகவா லாரன்ஸ், “அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். பலரும் அழைத்தது மகிழ்ச்சியளித்தது. விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ராகவா லாரன்ஸ் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஆசை அல்லது பதவிக்காக நான் அரசியலுக்கு வரமாட்டேன்.
மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அரசியல் குறித்து சிந்திக்கிறேன்.திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன். ஆனால் அதனால் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அர்த்தமில்லை. திருச்சி கிழக்கில் போட்டியிடவில்லை என்பதுதான் என் நிலைப்பாடு; வேறு எங்கும் போட்டியிடமாட்டேன் என்று நான் கூறவில்லை” என்றார்.மேலும், “என்னை பலரும் அரசியலுக்கு வர அழைத்தனர். திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறேன் என்ற தகவல் பரவியதும், ஏராளமானோர் அன்புடன் வரவேற்றனர்.
‘அண்ணா வாங்க... வெற்றி பெறச் செய்கிறோம்’ என்று பலர் உற்சாகம் அளித்தனர்.நான் செல்லும் இடமெல்லாம் ‘எம்.எல்.ஏ. சார், திருச்சி கிழக்கில் களமிறங்குகிறீர்களா?’ என்று கேட்டனர். அனைவரின் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், “ஆனால் அரசியலில் தர்மம் மிக முக்கியம். கட்சிக்காக ஆரம்பம் முதல் உழைத்தவர்களுக்கே முதலில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
திருச்சி கிழக்கில் நான் போட்டியிட வேண்டுமா? அல்லது விஜய் ஹீரோவாக இருந்த காலத்திலிருந்தே அவருக்காக உழைத்தவர்கள் களமிறங்க வேண்டுமா? அல்லது கட்சி தொடங்கிய நாள் முதல் உழைத்தவர்கள் வாய்ப்பு பெற வேண்டுமா? இதற்கான முடிவை தலைமைதான் எடுக்கும்” என்றார்.
மேலும், “ஒருவர் விதை விதைத்து, செடியை வளர்த்து, மரமாக்கி, கனியை உருவாக்குகிறார். அந்த கனியை இறுதியில் வேறு ஒருவர் வந்து பறித்து எடுத்துக்கொள்ளலாமா?அதேபோல், கட்சியில் உறுப்பினராக இணைந்து, பல ஆண்டுகள் உழைத்து, மக்களுடன் பயணித்த பிறகே பொறுப்புகள் வர வேண்டும். பின்னர் தலைமை வாய்ப்பு வழங்கினால், அந்த பதவியில் அமர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதுவே உண்மையான அரசியல் தர்மம்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
one who sows the seed reap fruit Lawrence puts an end Trichy East by election rumours