"கொளத்தூரில் எந்த முறைகேடும் நடக்கவில்லை"...எதையும் சந்திக்க நான் ரெடி! ஸ்டாலினை தோற்கடித்த விஎஸ் பாபு பதிலடி!
No irregularities took place in Kolathur I am ready to face anything VS Babu who defeated Stalin hits back
கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) தொடர்பாக திமுக எழுப்பிய சந்தேகங்களுக்கு மத்தியில், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. விஎஸ் பாபு, தேர்தல் நடைமுறையில் எந்த தவறும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில், அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக போட்டியிட்ட விஎஸ் பாபு வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 14 வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில், கடந்த 29-ஆம் தேதி சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் சரிபார்க்கப்பட்டதுடன், மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சில இயந்திரங்கள் செயல்படவில்லை, சீல் மற்றும் அடையாள எண்களில் முரண்பாடுகள் இருந்தன என திமுக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய விஎஸ் பாபு, "கொளத்தூரில் நடைபெற்ற தேர்தலிலும், வாக்கு எண்ணிக்கையிலும் எந்த தவறும் நடக்கவில்லை. அனைத்தும் சரியாக இருந்ததாக அதிகாரி சமீரன் தெரிவித்துள்ளார். மூன்று இயந்திரங்கள் வேலை செய்யவில்லை, சீல் எண்கள் மாறுபட்டன, டேக் புதிதாக இருந்தது உள்ளிட்ட திமுகவின் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. இந்த விவகாரத்தில் எந்த விசாரணையையும் சந்திக்க நானும், எங்கள் கட்சித் தலைமையும் தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.
இதற்கிடையில், திமுக தரப்பு தனது குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில், இந்த விவகாரம் அடுத்தகட்டமாக நீதிமன்றத்தில் எடுத்துச் செல்லப்படுமா என்பது அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்படுகிறது.
English Summary
No irregularities took place in Kolathur I am ready to face anything VS Babu who defeated Stalin hits back