விவாத நிகழ்ச்சியில் திமுகவினரை கெட்ட வார்த்தையில் திட்டிய நாஞ்சில் சம்பத்! நாற்காலி தூக்கி வீசிய திமுகவினர்!
Nanjil Sampath hurled profanities at DMK members during a debate show DMK members flung chairs in retaliation
சென்னை முகப்பேரில் தனியார் ஊடகம் சார்பில் நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில், தவெக மூத்த நிர்வாகி நாஞ்சில் சம்பத்துக்கும் திமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவாதத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தவெக சார்பில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர் திமுகவினரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்பட்ட நிலையில், அங்கிருந்த திமுக பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அரங்கில் இருந்த சில திமுகவினர் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய நிலையில், ஒருவர் நாற்காலியை எடுத்து அவரை நோக்கி வீசியதாக கூறப்படுகிறது.
அந்த நாற்காலி நாஞ்சில் சம்பத்தின் மீது பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
சூழல் மேலும் பதற்றமடைந்து இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டதால், விவாத நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர்.
இதற்கிடையே, விவாதத்தில் பங்கேற்ற திமுகவைச் சேர்ந்த ராஜீவ் காந்தி, அக்கட்சியினரை சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்ததாக கூறப்படுகிறது.
நாஞ்சில் சம்பத்தின் பேச்சு சர்ச்சையையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாற்காலி வீச்சு சம்பவத்தையும் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Nanjil Sampath hurled profanities at DMK members during a debate show DMK members flung chairs in retaliation