அண்ணாநகர் மண்டலத்தில் ரூ.9.17 கோடி மதிப்பீட்டில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு..!
Minister Shekar Babu laid the foundation stone for the construction of a new maternity hospital in Annanagar zone
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அண்ணாநகர் மண்டலத்தில் புதிய மகப்பேறு மருத்துவமனை கட்டும் பணியினை அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்துள்ளார்.
அண்ணாநகர் மண்டலம், வார்டு-96, யுனைடெட் இந்தியா நகர், முதல் பிரதான சாலையில் பழுதடைந்த நிலையில் இருந்த மகப்பேறு மருத்துவமனையினை இடித்து விட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.9.17 கோடி மதிப்பீட்டில் புதிய மகப்பேறு மருத்துவமனை கட்டும் பணி தொடங்கவுள்ளது.

இந்த மருத்துவமனைக் கட்டடமானது, 1275 ச.மீ. பரப்பளவிலான இடத்தில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்கள் என தலா 746 ச.மீ., அளவுடன் 2238 ச.மீ. பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இதில் 02 அறுவை சிகிச்சை அறைகள், 41 படுக்கைகள் கொண்ட படுக்கை வசதிகள், அவசர சிகிச்சை பிரிபு, மருந்தகம், ஸ்கேன், இரத்த சேகரிப்பு அறை, எக்ஸ்ரே வசதிகள், 02 மின் தூக்கிகள், 02 படிக்கட்டுக்களுடன் NICU கொண்ட நவீன மகப்பேறு மருத்துவமனையாக அமைக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு, ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
Minister Shekar Babu laid the foundation stone for the construction of a new maternity hospital in Annanagar zone