ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சக்கரபாணி.!!
minister sakkarapani reply to ops and eps
எங்கும் தமிழ், எதிலும் தமிழ்; சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ், இந்திய ஆட்சி மொழியாக தமிழ், தமிழில் அர்ச்சனை, இருமொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு எதிர்ப்பு என தமிழ் மீது மிகுந்த பற்றுடையது போல் காண்பித்துக் கொள்ளும் தி.மு.க, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பில் உள்ள பொருட்களை வட மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்திருப்பதும், அந்தப் பொட்டலங்களில் இந்தி வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதும் கடும் கண்டனத்துக்குரியது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ஆர்.சக்கரபாணி தனது ட்விட்டர் பக்கத்தில், மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை என்று வெளிப்படைத்தன்மையுடன் நேர்வழி பிறழாது பயணிக்கிறது கழக அரசு! அனைவரும் பாராட்டும் வகையில் நாட்டிலேயே சிறந்த முதல்வராக அண்ணன் தளபதி அவர்கள் திகழ்கிறார். கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் என்று பழகிவிட்ட சிலருக்கு இதனை பொறுக்க முடியவில்லை.
ஆகையால், பொய் பிரச்சாரங்களுக்கு பெயர் பெற்ற இவர்கள், மக்கள் நலனை மனதில் நிறுத்தி நேர்மை தவறாது உழைக்கும் கழக அரசின் மீது போலியான புகார்களை அள்ளி வீசுகின்றனர். விளம்பர நோக்கங்களுக்காக இவர்கள் வெளியிடும் போலி அறிக்கைகள் மக்கள் மன்றத்தில் எடுபடாது என்பது அனைவரும் அறிந்ததே!
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் உட்பட கழக அரசின் திட்டங்கள் யாவும் மக்களின் வாழ்வாதாரத்தையும், நலனையும் மேம்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. இதில் தவறு செய்பவர்கள் எவராயினும் துரிதமாக செயல்பட்டு, பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க அரசானது கடமைப்பட்டுள்ளது.
ஆளும் அரசை குறை கூறும் நோக்கத்தில் ஓ பன்னீர்செல்வம் தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். பொங்கல் பரிசு தொகுப்பு வைத்து எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆதாரத்துடன் நேரில் வந்தால் பதில் கூற தயார் என அமைச்சர் சக்கரபாணி பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
minister sakkarapani reply to ops and eps