பட்ஜெட்டுக்குப் பிறகு விஜய் கேபினெட்டில் அதிரடி மாற்றம்? 4 அமைச்சர்களுக்கு 'செக்'! இலாகா மாற்றத்துக்கும் வாய்ப்பு!விஜய் அதிரடி முடிவு?
Major reshuffle in Vijay cabinet after the budget
சென்னை: தமிழக அமைச்சரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு முக்கிய மாற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர்களின் செயல்திறன் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட உள்மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில், முதல்வர் விஜய் அமைச்சரவையில் முதன்முறையாக பெரிய அளவிலான மாற்றங்களை மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
தகவல்களின்படி, தற்போதைய அமைச்சர்களில் நான்கு பேர் பதவியை இழக்கும் வாய்ப்புள்ளதாகவும், மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு இந்த நடவடிக்கைகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதவி மாற்றம் எதிர்கொள்ளக்கூடிய அமைச்சர்களின் பட்டியலில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏ. விஜய் தமிழன் பார்த்திபன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கே. ஜெகதீஸ்வரி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
இந்த அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் எழுந்ததாகவும், நிர்வாக ரீதியாக அதிருப்தி நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சில அமைச்சர்களின் பொது நடவடிக்கைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் எஸ். கமாலி ஆகியோருக்கு வேறு பொறுப்புகள் வழங்கப்படலாம் என்றும், சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள காங்கிரஸ் கட்சியின் எஸ். ராஜேஷ் குமாருக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேறு துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கூட்டணிக் கட்சியான விசிகவைச் சேர்ந்த அமைச்சர் வன்னியரசுவுக்கும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த இலாகா வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோருக்கு, இடைத்தேர்தல் நிறைவடைந்த பிறகு அமைச்சரவையில் இடமளிக்கும் வாய்ப்பு குறித்தும் பேச்சு நிலவுகிறது. தற்போது அந்தத் தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இடைத்தேர்தலுக்குப் பிறகு இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
எனினும், அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இதுவரை அரசின் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. வெளியாகியுள்ள தகவல்கள் அனைத்தும் அரசியல் மற்றும் தலைமைச் செயலக வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின் அடிப்படையிலானவை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Major reshuffle in Vijay cabinet after the budget