கரூர் கூட்ட நெரிசல் மரணம்: சி.பி.ஐ. சம்மன்...! - டெல்லியில் ஆஜராகும் த.வெ.க. தலைவர் விஜய்
Karur crowd crush death CBI summons TVK leader Vijay appear Delhi
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கோர விபத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம், அரசியல் மட்டுமல்லாது பொதுமக்களிடையிலும் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சி.பி.ஐ. மேற்கொண்டு வருகிறது. இதற்காக கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகளிடம் அங்கே விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டது.
மேலும், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பிரசார வாகனத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு செய்திருந்த நிலையில், அந்த வாகனத்தை கரூருக்கு வரவழைத்து பல்வேறு கோணங்களில் தொழில்நுட்ப ரீதியாக சோதனை செய்தனர்.
இதன் போது பிரசார வாகனத்தின் டிரைவரிடம் தீவிரமாகவும் கூர்மையான கேள்விகளும் கேட்கப்பட்டன. விசாரணை முடிவடைந்ததும் அந்த வாகனம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இடம்பெறவில்லை என்றாலும், விசாரணையின் அடுத்த கட்டமாக அவரிடமும் நேரில் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில், த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டதை ஏற்று, விஜய் இன்று காலை சுமார் 6 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள தனது இல்லத்திலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டார்.
அவர் தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார்.விஜய் டெல்லி வருகையை முன்னிட்டு அவரது ரசிகர்கள், த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் டெல்லிக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
இதனால் சி.பி.ஐ. அலுவலகம் மற்றும் விஜய் செல்லும் வழித்தடங்களில் பெரும் கூட்டம் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே த.வெ.க. இரண்டாம் கட்ட தலைவர்களிடம் மூன்று நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதேபோல் விஜய்யிடமும் நீண்ட நேர விசாரணை நடத்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Karur crowd crush death CBI summons TVK leader Vijay appear Delhi