ஒரே ஒரு ஓட்டு வித்தியாசம்! திருப்பத்தூரில் ஒரே வாக்கினால் வரலாறு மாறியது!வியப்புடன் குறிப்பிட்ட ஆனந்த் மஹிந்திரா!
Just one vote difference History changed with one vote in Tirupattur Anand Mahindra remarked with surprise
தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் பதிவான அதிரடி முடிவு நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி–தோல்வி தீர்மானிக்கப்பட்ட இந்த முடிவு குறித்து, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது எக்ஸ் (X) தளப் பதிவில், “சமீபத்திய மாநிலத் தேர்தல் முடிவுகளில் பல ஆச்சரியங்கள் இருந்தாலும், இந்த ஒரு படம் மறக்க முடியாத அரசியல் தருணமாக இருக்கும். 1.66 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவான நிலையில், வெறும் ஒரு வாக்கு வரலாற்றை மாற்றியுள்ளது. இந்தப் படம் ஒவ்வொரு பள்ளியிலும் காட்டப்பட வேண்டும். ஒரு வாக்கின் வலிமையை குழந்தைகள் புரிந்து கொள்ள இது உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், ஐந்தாவது முறையாக போட்டியிட்டவருமான பெரியகருப்பன் களமிறங்கினார். அவருக்கு எதிராக தமிழக வெற்றி கழகத்தின் சீனிவாச சேதுபதி போட்டியிட்டார். மொத்தம் 2,13,739 வாக்குகள் பதிவான இந்தத் தொகுதியில், ஆரம்ப சுற்றுகளில் பெரியகருப்பன் முன்னிலை வகித்தார்.
20-வது சுற்று வரை அவர் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கடைசி கட்ட சுற்றுகளில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வேகமாக முன்னேறி வாக்கு வித்தியாசத்தை குறைத்தார்.
25-வது சுற்றில் இருவருக்கும் இடையே 1,127 வாக்குகள் மட்டுமே வித்தியாசமாக இருந்தது. 26-வது சுற்றில் சீனிவாச சேதுபதி 199 வாக்குகள் முன்னிலை பெற்றார். இறுதி சுற்றிலும் கடுமையான போட்டி நிலவியது.
தபால் வாக்குகள் எண்ணிக்கையில் பெரியகருப்பன் முன்னிலை பெற்றிருந்தாலும், பின்னர் பழுதடைந்திருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்த வாக்குகள் சேர்க்கப்பட்டபோது நிலைமையே மாறியது. இறுதியில், சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும், பெரியகருப்பன் 83,374 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த சம்பவம் ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கின் மதிப்பையும் மீண்டும் நினைவூட்டும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஆனந்த் மஹிந்திராவின் பதிவு இதை தேசிய அளவில் மேலும் பேசுபொருளாக மாற்றியுள்ளது.
English Summary
Just one vote difference History changed with one vote in Tirupattur Anand Mahindra remarked with surprise