மேயர் பிரியா முதல்வர் விஜய்யை சந்திக்காததற்கு இதுதான் காரணமா? சென்னை துணை மேயர் மகேஷ்குமார் விளக்கம்!
Is this the reason why Mayor Priya did not meet Chief Minister Vijay Chennai Deputy Mayor Mahesh Kumar explains
முதல்வர் விஜய் பதவியேற்று பல நாட்கள் கடந்தும், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் உள்ளிட்ட முக்கிய உள்ளாட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்காதது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி துணை மேயரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான மு. மகேஷ்குமார் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர், தவெக தலைமையிலான மாநில அரசுடன் சென்னை மாநகராட்சி முழுமையான ஒத்துழைப்புடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழா மற்றும் அதன் பின்னர் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சிகளில் மாநகராட்சி நிர்வாகிகள் பங்கேற்காதது குறித்து கேட்கப்பட்டபோது, மகேஷ்குமார் கூறியதாவது:“முதல்வரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கும், பின்னர் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சிகளுக்கும் மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு எந்த அழைப்பும் அனுப்பப்படவில்லை. அதனால் நாங்கள் பங்கேற்கவில்லை.”
முதல்வரை இதுவரை சந்திக்காதது குறித்து அவர் கூறுகையில்:“முதல்வரை உள்ளாட்சி பிரதிநிதிகள் சந்திக்க வேண்டும் என்று எந்த சட்ட விதிமுறையும் இல்லை. அது ஒரு மரபு சார்ந்த விஷயம். அரசுத் தரப்பிலேயே உள்ளாட்சி பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற சூழலில், அந்த சந்திப்பு குறித்து மட்டும் கேள்வி எழுப்புவது நியாயமல்ல.”என்றார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்றபோது, அப்போதைய சென்னை மேயர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்றதை சுட்டிக்காட்டியபோது, மகேஷ்குமார்:“அப்போது மேயராக இருந்த ஸ்டாலினுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு அனுப்பப்பட்டதால் அவர் பங்கேற்றார். தற்போது அத்தகைய அழைப்பு எதுவும் வரவில்லை.”என்று விளக்கமளித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:“பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சியை அரசே புறக்கணிக்கும் சூழல் உருவாகக் கூடாது. அந்த நிலைமையில் நாங்களாகவே வலியச் சென்று சந்திப்பது சாத்தியமற்றது.”என்றார்.
மாநில அரசுக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் மக்கள் நலத்திட்டங்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு, அவர் தெளிவாக பதிலளித்தார்:“அரசின் திட்டங்களை சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவதற்கு தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம். நிர்வாகப் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள். மக்கள் நலத்திட்டங்களுக்கு திமுக ஒருபோதும் தடையாக இருக்காது.”என்று உறுதியளித்தார்.
இதன்மூலம், அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், சென்னை மாநகராட்சி மற்றும் மாநில அரசு இடையே நிர்வாக ஒத்துழைப்பு தொடரும் என்ற செய்தியை துணை மேயர் மகேஷ்குமார் வெளிப்படுத்தியுள்ளார்.
English Summary
Is this the reason why Mayor Priya did not meet Chief Minister Vijay Chennai Deputy Mayor Mahesh Kumar explains