“அம்மாவுக்கு ஒரு புடவை கூட வாங்கிக்கொடுக்கவில்லை” — நாங்கள் செட்டில் ஆனோம்.. இளையராஜா ஓபன் டாக்
I didnot even buy a saree for my mother We settled down Ilayaraja Open Talk
இந்திய திரையிசையின் அடையாளமாக திகழ்பவர் இசைஞானி இளையராஜா. கடந்த ஐந்து தசாப்தங்களாக இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் அவர், ஆயிரக்கணக்கான பாடல்கள் மற்றும் 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து இசை வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்துள்ளார்.
ஒரே மாதிரியான இசையை மீண்டும் மீண்டும் தராமல், ஒவ்வொரு படத்திற்கும் தனித்துவமான இசை மொழியை உருவாக்கியவர் என்ற பெருமை இளையராஜாவுக்கு உண்டு. அதனால் தான் தலைமுறைகள் கடந்தும் அவரது இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
திரைப்பட இசையைத் தாண்டியும் மேற்கத்திய இசை வடிவமான சிம்பொனியில் தனது திறமையை நிரூபித்த இளையராஜா, இந்தியாவிலிருந்து சிம்பொனி அரங்கேற்றிய முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார். இதற்காக அவருக்கு அரசியல் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த பலரும் பாராட்டு தெரிவித்தனர். தமிழ்நாடு அரசும் அவருக்காக சிறப்பு பாராட்டு விழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இத்தனை சாதனைகள், புகழ், பாராட்டுகள் கிடைத்தபோதிலும், தனது வாழ்க்கையில் ஒரு குறை மட்டும் மனதை விட்டு போகவில்லை என்பதை இளையராஜா சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில் பகிர்ந்திருந்தார். அந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
அந்தப் பேட்டியில் அவர் தனது ஆரம்பகால வாழ்க்கைப் போராட்டங்களை நினைவுகூர்ந்து பேசும்போது, “நாங்கள் சென்னைக்கு வரும்போது எங்கள் அம்மா வீட்டில் இருந்த ரேடியோவை விற்று 400 ரூபாய் கொடுத்தார். அந்தப் பணத்தை எங்களிடம் கொடுத்துவிட்டு இது போதுமா என்று கேட்டார். நாங்களோ வீட்டு செலவுக்கு 50 ரூபாய் கூட அம்மாவிடம் வைக்காமல் முழு பணத்தையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டோம்” என்று கூறியிருந்தார்.
மேலும், “பிறகு நான் இசையமைப்பாளராக வளர்ந்தேன். குடும்பமும், பிள்ளைகளும், வாழ்க்கையும் செட்டிலாகிவிட்டது. ஆனாலும் என் அம்மாவுக்கு ஒரு புடவை கூட வாங்கிக்கொடுக்கவில்லை. வளையல், நகை எதுவும் வாங்கித் தர முடியவில்லை” என்று வேதனையுடன் பகிர்ந்திருந்தார்.
இளையராஜாவின் இந்த உருக்கமான நினைவுகள், வாழ்க்கையில் எவ்வளவு உயரம் சென்றாலும் சில வருத்தங்கள் மனதில் நீங்காமல் இருப்பதை நினைவூட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது இந்த பேட்டி தற்போது பலரது மனதையும் தொட்டுள்ளது.
English Summary
I didnot even buy a saree for my mother We settled down Ilayaraja Open Talk