'விவசாயிகள் அமைதி காப்பது பலவீனம் அல்ல'..! - கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டம் பெருகும்...! - மு.க. ஸ்டாலின் அதிரடி எச்சரிக்கை!
Farmers keeping peace not weakness If demands not fulfilled protest increase Mk Stalin action alert
காவிரி நீர் உரிமை, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தி.மு.க.வின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காவிரி விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்ற கழகத் தோழர்களுக்கும், தோழமைக் கட்சித் தலைவர்கள் ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக் உள்ளிட்ட அனைவருக்கும், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஜூன் 12-ஆம் தேதி தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய காவிரி நீர், ஆகஸ்ட் மாதம் தொடங்கியும் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. ஆடிப்பெருக்கு நாளில் காவிரி கரை மகிழ்ச்சியில் இருக்க வேண்டிய டெல்டா விவசாயிகள் இன்று ஏமாற்றத்திலும் வேதனையிலும் தவித்து வருகின்றனர். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரை தமிழகம் தற்போது காண்கிறது” என்று விமர்சித்துள்ளார்.
அதேபோல், “விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு, அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தீவிரமாக செயல்படும் நிலையில், தமிழக அரசு உரிய அழுத்தத்தை கொடுக்கத் தவறியுள்ளது.
கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்போது, தமிழகத்தில் அதுபோன்ற ஆலோசனைக் கூட்டத்தை நடத்த கூட அரசுக்கு முனைப்பு இல்லை” என்றும் அவர் சாடியுள்ளார்.மேலும், “விவசாயிகளை நேரில் சந்திக்காமல் புறக்கணிக்கும் அரசு, அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
தேர்தல் வாக்குறுதியின்படி முழு விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும். குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பை உடனடியாக வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். காவிரியில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தி.மு.க.வின் போராட்டம் தொடரும்” என்று மு.க. ஸ்டாலின் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Farmers keeping peace not weakness If demands not fulfilled protest increase Mk Stalin action alert