"அம்மாவிடம் இருந்து தப்பிக்கவே முடியாது".. நள்ளிரவில் காரை எடுத்துச் சென்ற சம்பவத்தை பகிர்ந்த ஜேசன் சஞ்சய்
There no escaping Mom Jason Sanjay shares the story of taking the car out at midnight
தமிழக முதல்வர் விஜய்யின் மகனும், இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஜேசன் சஞ்சய், தனது சிறுவயது அனுபவங்கள், பெற்றோர் விஜய் - சங்கீதா குறித்து அளித்துள்ள பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹீரோவாக அறிமுகமாகுவார் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, தனது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் போல இயக்குநராக களமிறங்கியுள்ள ஜேசன் சஞ்சய், 'சிக்மா' படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து ஜேசன் சஞ்சய் தயாரித்துள்ளார். முதலில் ஜூலை 31-ஆம் தேதி வெளியாக இருந்த படம், 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீட்டால் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது குடும்பம் குறித்து ஜேசன் சஞ்சய் மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில், சிறுவயதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை தந்தை விஜய்யின் தோளில் அமர்ந்து பார்த்த நினைவுகளை பகிர்ந்த அவர், தனது தாய் சங்கீதா குறித்து சுவாரஸ்யமான சம்பவத்தையும் கூறினார்.
"என் அம்மா ஒரு உளவுத்துறை அதிகாரி மாதிரி. என்ன செய்தாலும் கண்டுபிடித்துவிடுவார். அவரை ஏமாற்றிவிட்டு வெளியே செல்ல முயற்சித்தால் கண்டிப்பாக மாட்டிக்கொள்வேன்" என்று சிரித்தபடி தெரிவித்தார்.
மேலும், ஒருமுறை வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு யாரிடமும் சொல்லாமல் காரை எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் வெளியே சென்றதாகவும், தனது செல்போனையும் அணைத்துவிட்டதாகவும் கூறினார்.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் தன்னை காணவில்லை என்று பதற்றமடைந்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கத் தயாரானதாகவும், மறுநாள் காலை வீடு திரும்பியபோது குடும்பத்தினரிடம் கடுமையாக திட்டும் வாங்கியதாகவும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்தார்.
இந்த பேட்டியில், தனது தந்தை விஜய் மற்றும் தாய் சங்கீதா குறித்து ஜேசன் சஞ்சய் பேசிய விதம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, குடும்ப உறவு குறித்து அவர் பகிர்ந்த அனுபவங்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளன.
English Summary
There no escaping Mom Jason Sanjay shares the story of taking the car out at midnight