இருமொழிக்கொள்கையில் இரட்டை வேடம் அம்பலம்; 100 நாள் வேலைத்திட்டத்தில் பச்சை துரோகம்; திமுக அரசை குற்றஞ்சாட்டும் இபிஎஸ்..!
EPS alleges that Chief Minister Stalins double standards on the two-language policy in the Navodaya schools issue in Tamil Nadu have been exposed
தமிழக மக்களிடம் இருமொழிக் கொள்கையில் முதல்வர் ஸ்டாலினின் இரட்டை வேடம் அம்பலப்பட்டுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மூத்த வழக்கறிஞர்களை நியமித்து தமிழகத்தின் வாதங்களை சரியான முறையில் எடுத்துரைக்காத காரணத்தினால், கடந்த 15-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நவோதயா பள்ளிகளை நடத்துவதற்கு குறிப்பிட்ட காலத்தில் நடவடிக்கை எடுக்கவும், அது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள், கொலை வழக்கு குற்றவாளிகள், திமுக-வின் ஊழல் அமைச்சர்கள் இவர்களையெல்லாம் காப்பாற்றுவதற்காக, பலகோடி அரசுப் பணத்தை செலவிட்டு, டில்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர்களை நியமித்து உச்சநீதிமன்றத்தில் வாதாடும் நிலையில், மொழிப் பிரச்சனை பற்றிய இம்முக்கிய வழக்கில் ஏனோ தானோ என்று நடந்துகொண்டதும், மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடாததும், தமிழக மக்களிடம் இருமொழிக் கொள்கையில் முதல்வர் ஸ்டாலினின் இரட்டை வேடம் அம்பலப்பட்டுள்ளது.
2025, டிசம்பர் மாதம் 04-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில், முதல்வர் ஸ்டாலினின் 2011-ஆம் ஆண்டின் தேர்தல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பல மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது. ஆனால், நவோதயா பள்ளி வழக்கில் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வாதாடவில்லை. இதிலிருந்து இருமொழிக் கொள்கையில் விடியா திமுக அரசின் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் புரிந்துகொள்வர். நவோதயா பள்ளி வழக்கில் தமிழகத்தின் வாதங்களை சரியான முறையில் எடுத்துரைக்காத முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.
மற்றொரு அறிக்கை:
2021 சட்டசபை பொதுத்தேர்தலின் போது, திமுகவின் தேர்தல் அறிக்கையில், இன்றைய முதல்வர், அன்றைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், மற்றும் ஊதியமும் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார் .
மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை. அவர் பதிவிட்டு இருந்த நீண்ட அறிக்கையில் ஏன் இதை பற்ற எந்த குறிப்பும் இல்லை? இது போன்ற பச்சை துரோகத்தை செய்து விட்டு பச்சை துண்டு பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கிறது ?
தற்போது, மத்திய அரசு இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த உத்தேசித்துள்ளதை வரவேற்க்கிறேன். எனினும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் எவ்வித மாற்றமுமின்றி தொடர மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.'' என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
English Summary
EPS alleges that Chief Minister Stalins double standards on the two-language policy in the Navodaya schools issue in Tamil Nadu have been exposed