தியாகி சிறுதொண்டமாதேவி தேசிங்கு சகோதரர் மறைவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல்.!
Dr Ramadoss Mourning to Aarumugam padaiyatchi
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
"வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் ஏந்தி வீரச்சாவு அடைந்த தியாகி சிறுதொண்டமாதேவி தேசிங்கின் சகோதரர் து. ஆறுமுகம் படையாட்சி உடல் நலக் குறைவால் நேற்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது சிறுதொண்டமாதேவி தேசிங்கு காட்டிய வீரத்திற்கும், தியாகத்திற்கும் ஈடு இணை கிடையாது.
பட்டப்படிப்பை முடித்திருந்த நிலையில், 20-ஆவது வயதில் காவல்துறையின் மிரட்டலுக்கு அஞ்சாமல் சாலை மறியல் போராட்டத்திற்கு தலைமையேற்று துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் வாங்கியவன் அந்த மாவீரன்.
அந்த மாவீரனின் சகோதரர் ஆறுமுகம் படையாட்சியை நான் நன்றாக அறிவேன். பாட்டாளி மக்கள் நலனிலும், பா.ம.க. வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வந்தவர்.
ஆறுமுகம் படையாட்சியின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் காலமானார். அந்த அதிர்ச்சி மற்றும் சோகத்திலிருந்து குடும்பம் மீள்வதற்கு முன்பாகவே ஆறுமுகம் படையாட்சியும் உயிரிழந்திருப்பது தாங்கிக் கொள்ள முடியாத சோகம் ஆகும்.
ஆறுமுகம் படையாட்சியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆறுமுகம் படையாட்சியின் இறுதி ஊர்வலத்தில் பா.ம.க மாநில, மாவட்ட, உள்ளூர் நிர்வாகிகள் கலந்து கொள்வர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Mourning to Aarumugam padaiyatchi