'ஜனநாயகத்தை காசு கொடுத்து விலைக்கு வாங்காதீங்க'...! - குதிரைபேர அரசியலுக்கு எதிராகக் குரல் கொடுத்த ஜோதிமணி...!
Dont buy democracy money Jyothimani who raised her voice against Kudhipera politics
தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. இந்த அரசியல் மாற்றம் மாநில அரசியல் களத்தில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் குதிரைப்பேர அரசியல் நடைபெற்றுள்ளதாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.இந்த நிலையில், குதிரைப்பேர அரசியலை எந்த சூழலிலும் நியாயப்படுத்த முடியாது என்று கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆட்சியிலும் பங்கெடுத்துள்ளது. இந்த தேர்தலில் மக்கள், சி. ஜோசப் விஜய்யை முதல் அமைச்சராக தேர்வு செய்ததன் மூலம் சிறப்பான ஆட்சியை எதிர்பார்த்துள்ளனர்.
அந்த எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு அவர் செயல்பட்டு வருவதாக தெரிகிறது” என குறிப்பிட்டுள்ளார்.மேலும், “தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் முயற்சியில் கூட்டணி கட்சியாக காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். ஆனால், அதற்காக தவெக தேர்வு செய்யும் அனைத்து அரசியல் நடைமுறைகளையும் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கே ஆதரவு வழங்க முடியும். ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் செயல்முறைகளுக்கு ஆதரவு அளிக்க இயலாது” என தெரிவித்துள்ளார்.அதேபோல், “இத்தகைய சூழல்களில் மாற்றுக் கருத்துகளை வெளிப்படையாக கூறுவது அரசியல் மற்றும் தார்மீக ரீதியாக சரியான அணுகுமுறை.
இதையே தமிழ் இலக்கியம் ‘தோழமை சுட்டுதல்’ என அழகாக விளக்குகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து, “குதிரைப்பேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் ஆதரித்தாலும் அது தவறான அணுகுமுறையாகவே பார்க்கப்படும். இந்திய அரசியலில் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஆயுதமாக குதிரைப்பேர அரசியலை முதன்முதலில் பயன்படுத்தியது பாஜக” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“மக்கள் காங்கிரஸை ஆட்சிக்கு தேர்வு செய்த பல மாநிலங்களில், மக்கள் தீர்ப்புக்கு எதிராக குதிரைப்பேர அரசியல் மூலம் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை தடுக்கவும், அமைந்த ஆட்சிகளை கவிழ்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், “தமிழகத்தில் குதிரைப்பேர அரசியலை ஆதரித்து, பிற மாநிலங்களில் அதனை எதிர்க்கும் இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் ஒருபோதும் எடுக்காது.
ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் சக்தியாக காங்கிரஸ் மாறிவிட்டால், அது காந்தி, நேரு மற்றும் கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு செய்யப்படும் வரலாற்று துரோகமாகிவிடும்” எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இறுதியாக, “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொள்கைக்காக சமரசமின்றி போராடி வரும் நிலையில், அந்த அரசியல் போராட்டத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற்சியையும் ஏற்க முடியாது” என்று ஜோதிமணி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Dont buy democracy money Jyothimani who raised her voice against Kudhipera politics