திமுக ஆட்சியில் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது - ஆர்.பி. உதயகுமார் கண்டனம்!
DMK govt ADMK RP Udayakumar
திமுக ஆட்சியில் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழ்நாட்டில் கல்வி முடித்த கோடிக்கணக்கான இளைஞர்கள் நாட்டிற்கு சேவை செய்ய தகுதியுடன் காத்திருக்கின்றனர். ஆனால் திமுக ஆட்சியில் தகுதி, திறமை, நேர்மை எல்லாம் புறக்கணிக்கப்பட்டு, பணமே முக்கியமான அளவுகோலாக மாறியுள்ளது. இதனால் வேலை வாய்ப்பு, நம்பிக்கை, வறுமை ஒழிப்பு ஆகியவை அனைத்தும் சிதைந்து விட்டன” என்று கூறினார்.
அவர் மேலும், “நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரின் உறவினர் அரசு வங்கியில் பெற்ற கடன் விவகாரம் அமலாக்கத்துறையால் விசாரணைக்கு எடுத்தபோது ரூ.888 கோடி ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. இதேபோல் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பணம் வாங்கி 2,538 பேருக்கு முதல்வரின் கையால் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இது முதல்வரின் அறிவில்லாமல் நடந்திருக்குமா?” என கேள்வி எழுப்பினார்.
“அமலாக்கத்துறை ஆதாரம் காட்டி நடவடிக்கை எடுக்கச் சொன்னால், மாநில காவல்துறை ‘நாங்கள் தபால்காரர்களா?’ என்று எதிர்வினை தெரிவிக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு ஊழலைச் செய்தவர்களைப் பாதுகாக்கும் அரசாக மாறியுள்ளது. பணம் செலவழித்து ஆட்சிக்கு வந்தவர்கள், அதை மக்களிடம் கையூட்டாக திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் அரசு பணியின் நம்பகத்தன்மை சிதைந்துள்ளது” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
“இளைஞர்களுக்கு அரசியலில் வாய்ப்பு அளிப்பதாக கூறும் உதயநிதி ஸ்டாலின், தகுதியான இளைஞர்கள் பணம் கொடுக்க முடியாததால் புறக்கணிக்கப்படுவதைப் பார்க்கவில்லை. சமூக நீதி எங்கே போனது?” என்றும் அவர் விமர்சித்தார்.
இறுதியில், “இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருந்து 2026 தேர்தலில் திமுக அரசை வீழ்த்தினால் மட்டுமே மக்களாட்சி மீண்டும் மலரும்” என உதயகுமார் வலியுறுத்தினார்.
English Summary
DMK govt ADMK RP Udayakumar