முதல்வர் பதவிக்கு மல்லுக்கட்டும் மூன்று பேர்; அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதில் தொடரும் குழப்பம்; காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் திருவனந்தபுரம் வருகை..!
Congress High Command observers arrive in Thiruvananthapuram amidst continuing confusion over the selection of the next Chief Minister
கேரளாவில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றுள்ள நிலையில், 03 நாட்கள் ஆகியும் மூன்று பேர் முதல்வர் பதவிக்கு மூன்று பேர் மல்லுக்கட்டுவதால், இன்னும் முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ள நிலையில், காங்கிரஸ் மேலிடக்குழு திருவனந்தபுரம் வந்துள்ளது.
தொடர்ந்து 10 வருடங்களாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காங்கிரஸ் இந்த முறை வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியில் தேர்தல் களத்தை சந்தித்தது. முன்னதாக காங்கிரசில் மூத்த தலைவர்களுக்குத் தான் தேர்தலில் அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை பெரும்பாலும் மூத்த தலைவர்களை ஒதுக்கி வைத்து இளைஞர்களுக்கு கூடுதலாக வாய்ப்பு வழங்கப்பட்டது.
மறுபுறம் இடதுசாரி கூட்டணி சார்பில் இந்த முறை போட்டியிட்ட 13 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். இவர்களில் 09 பேரையும் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த இளைஞர்கள் தான் தோற்கடித்துள்ளனர்.

இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல திட்டங்களை வகுத்த காங்கிரஸ் இப்போது முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறி வருகிறது. கடந்த பினராயி விஜயன் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சதீசன், அதற்கு முந்தைய பினராயி விஜயன் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா, ஆலப்புழா தொகுதி எம்பியான கே.சி. வேணுகோபால் ஆகிய 03 பேரும் தான் முதல்வர் பதவிக்கு போட்டி போட்டு வருகின்றனர்.
இவர்கள் கட்சிக்குள் தங்களுக்கு ஆதரவை திரட்டி வருகின்ற நிலையில், இவர்களுடைய ஆதரவாளர்கள் தங்களது தலைவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பேனர்களையும் வைத்து வருகின்றனர். இதில் தனக்கு 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கே.சி. வேணுகோபால் கூறுகிறார். தங்களுக்குத் தான் பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக சதீசனும், ரமேஷ் சென்னித்தலாவும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் மேலிடம் மூத்த தலைவர்களான அஜய் மாக்கன், முகுல் வாஸ்னிக் ஆகியோரை திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்குப் பின் காங்கிரஸ் மேலிடக்குழு, எம்எல்ஏக்களை தனித்தனியாக சந்திக்க திட்டமிட்டுள்ளது. அப்போது எம்எல்ஏக்கள் தங்களது கருத்துக்களை கேட்டறிந்து, அதன் பிறகு முதல்வர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்பது குறித்து மேலிடக் குழு தீர்மானிக்கும்.
அதன் பின்னர் முதல்வரை தேர்வு செய்யும் பொறுப்பை காங்கிரஸ் மாநில தலைவரிடம் இக்குழு ஒப்படைக்கும். இதன் பிறகே முதல்வர் யார் என்பது முறைப்படி அறிவிக்கப்படும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் 24 மணி நேரத்தில் முதல்வரை தேர்வு செய்வோம் என்று தேர்தலுக்கு முன்பு ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார். ஆனால் தேர்தல் முடிவு வந்து 03 நாட்கள் ஆகியும் இதுவரை முதல்வரை தேர்வு செய்ய முடியாத அளவுக்கு காங்கிரசில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Congress High Command observers arrive in Thiruvananthapuram amidst continuing confusion over the selection of the next Chief Minister