சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்கக் கோரி முதலமைச்சர் தனித் தீர்மானம்; இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு..!
Communist Party of India welcomes Chief Ministers separate resolution seeking recognition of Tamil in Madras High Court
''சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கப்பட வேண்டும். வழக்குத் தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் மக்களுக்கு எளிதாக புரியும் என தமிழ்நாடு முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய போது குறிப்பிட்டுள்ளதும் வரவேற்பிற்குரியது.''என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மற்றும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கக் கோரி தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்மொழிந்தார். அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதும் வரவேற்பிற்குரியது.
இது தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான இலக்கியப் பேராசான் ஜீவானந்தம் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழ் பயிற்று மொழியாக திகழ வேண்டும். ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாக, நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்து வந்தார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி.இராமமூர்த்தி, பேராசிரியர் நா.வானமாமலை, ஏராளமான தமிழறிஞர்களும், வழக்கறிஞர்கள் சங்கமும் இக்கோரிக்கைக்காக போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழை வழக்காடு மற்றும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கக் கோரி தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கப்பட வேண்டும். வழக்குத் தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் மக்களுக்கு எளிதாக புரியும் என தமிழ்நாடு முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய போது குறிப்பிட்டுள்ளதும் வரவேற்பிற்குரியது.
இத்தீர்மானத்தை ஏற்று, தமிழை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக, அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுத்தர வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.''என்று மு.வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Communist Party of India welcomes Chief Ministers separate resolution seeking recognition of Tamil in Madras High Court